தமிழகத்தில் கொரோனோ, ஒமிக்ரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 10 மணி முதல் 5 மணி வரை பகுதி நேர ஊரடங்கு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனோ மற்றும் ஒமிக்ரான் நோயை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது.


இதனை தொடர்ந்து  2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்சியில் முக்கிய பகுதிகளான ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மேலப்புதூர், சென்னை பைபாஸ், நம்பர் 1 டோல்கேட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.சாலைகள் தோறும் காவல்துறையினர் பலத்த வாகன சோதனை ஈடுபட்டனர். திருமணத்துக்கு செல்பவர்கள் தங்களது திருமண அழைப்பிதழை காட்டியும், மருத்துவமனைக்குச் செல்வதற்கு உரிய மருத்துவ சீட்டை காண்பித்தும் சென்றனர்.





திருச்சியில் இன்று காலை விமானத்தில் இருந்து வந்த பயணிகள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளை காட்டி சென்றனர், மேலும் முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்களது பணியிடத்தில் அளித்த அடையாள அட்டையை காண்பித்து சென்றனர். மேலும் திருச்சி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.


குறிப்பாக உணவு விடுதிகளில் ஆன்லைன் மூலம் பார்சல் சேவை மட்டும் வழங்கி வருகிறது. மருத்துவமனைகள் மருந்துக்கடைகள்  வழக்கம் போல இயங்கி வருகிறது. பொதுப் போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வாடகை ஊர்திகள் அனைத்தும் இயக்கப்படவில்லை. திருச்சியில் சுமார் 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு விதிமுறைகளை மீறி,  தேவையற்ற முறையில் சாலையில் செல்லும் நபர்களை விசாரணை செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.




மேலும் காவல்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுபடுத்த வேண்டும் என நோக்கத்தோடு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேவையற்ற காரணங்களை கூறிக்கொண்டு சாலையில் பயணம் செய்தால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் பொதுமக்களிடம் ஓளிபெருக்கி மூலம் அறிவுறை வழங்கி வருகிறார்கள். இந்ந்நிலையில்  கடந்த ஞாயிறு அன்று முழு ஊரடங்கு நேரத்தில் தேவையற்ற முறையில் சுற்றி திரிந்தவர்களிடம் இருந்து காவல்துறையினர் ரூபாய் 8 லட்சம் அபராதமாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.