பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பகல் நேரங்களில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளிடம் கொள்ளை அடிப்பது, சாலையில் தனியாக நடந்து செல்பவர்களிடம் நகைகளை பறிப்பது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பெரம்பலூர் காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்களது விவரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், வெளியூருக்கு செல்லும் போது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களது புகைப்படம் ஆங்காங்கே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அந்த நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களால் சமுதாய சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் கவனமாக இருப்பது மட்டுமின்றி விழிப்புணர்வுடன் இருப்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.




இந்நிலையில் பெரம்பலூர் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரு சக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்களுடன் இரு சக்கர வாகனங்களில் செல்லும் ரோந்து பணியை மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் கூறுகையில், "சிறப்பு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் ரோந்து பணிபுரிந்தும், சந்தேகப்படும் வகையில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தும், நகரில் பூட்டியுள்ள வீடுகள் மற்றும் அதில் வசித்து வருபவர்களின் தகவல்களை சேகரித்தும், வாகன தணிக்கை செய்தும் குற்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் திறம்பட செயல்படுவார்கள். எனவே பெரம்பலூர் நகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், உங்கள் பகுதியில் ரோந்து அலுவல் மேற்கொள்ளும் போலீசாரின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு, தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தை 24 மணி நேரமும் 9498100690 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது." என்றார்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண