புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம் (53). இவர் பரமக்குடி மற்றும் திருவாரூரில் ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு ஆயிஷா பீவி என்ற மனைவியும், ராஜா முகமது, சேக் அப்துல்காதர் என்ற 2 மகன்களும், பர்கானா என்ற மகளும் உள்ளனர். இதில் பர்கானாவிற்கு திருமணமாகி விட்டது.  மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிக்கல் கடையை பார்த்து வருகின்றனர். முகமது நிஜாம், ஆயிஷா பீவி ஆகிய இருவர் மட்டும் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசலில் முகமது நிஜாம் ரம்ஜான் சிறப்பு தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் முன்பக்க வராண்டாவில் உட்கார்ந்து தனது செல்போனை பார்த்து கொண்டிருந்தார்.  அப்போது மர்ம நபர்கள் 3 பேர் வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து வீட்டிற்குள் வந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக முகமது நிஜாமின் கழுத்தை மர்மநபர்கள் கத்தியால் அறுத்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து முகமது நிஜாம் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற மர்மநபர்கள் ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டு விட்டு, பீரோவில் இருந்த சாவியை தரும்படி கேட்டுள்ளனர். அவர் தர மறுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் ரத்தக்கறையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். 

 



 

இதில் உயிருக்கு பயந்து போய் ஆயிஷா பீவி பீரோவின் சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார். உடனே சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 170 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.  இதைத்தொடர்ந்து கை, கால்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஆயிஷா பீவி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  தகவலின்பேரில், விரைந்து வந்து பார்த்த உறவினர்கள் முகமது நிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று கை, கால்கள் கட்டப்பட்டிருந்த ஆயிஷா பீவியை காப்பாற்றினர். கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்ததும் அவரது மனைவி கதறி துடித்தார். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு முகமது நிஜாமின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணமேல்குடி காவல்துறையினர்  முகமது நிஜாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். 

 



 

மேலும் துணை காவல் சூப்பிரண்டுகள் மனோகரன், அருள்மொழி அரசு, சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.  இதுகுறித்து மணமேல்குடி காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? அல்லது நகை கொள்ளைக்காக இந்த கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிவாசலுக்கு எதிரே எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் முகமது நிஜாமை கொலை செய்து விட்டு, 170 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.