திருச்சி: அழிக்கபட்ட கெட்டுபோன 140 கிலோ சிக்கன், 50 கிலோ பழங்கள் - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள உணவங்கள், குறிப்பாக சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் காலாவதியான பொருள்களை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்கிறது, உணவுப் பாதுகாப்புச் சட்டம். ஆனால், சில கடைகளில் காலாவதி தேதியை மாற்றிவிட்டுப் பொருள்களை விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் உணவகங்களில் சமைக்க பயன்படுத்தபடும் பொருட்கள், சுத்தமாகவும், ஆரோகியமாகவும் இருக்க வேண்டும். அதேசமயம் இறைச்சி வகைகள் சமைக்க பயன்படுத்தும் போது நல்லதாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உயிரிழப்புகள் நடந்து வருகிறது. ஆகையால் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவா, உணவுகளை பாதுகாக்க முறையான பிரீசர் வசதி உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும். மேலும் இவ்வாறு உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


இந்நிலையில் நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் கடந்த 16-ந் தேதி சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சியில் தில்லைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சவர்மா கோழிக்கறி மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யும் 21 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கெட்டுப்போன 140 கிலோ அசைவ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. இதில் 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் 6 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஜூஸ்போட அழுகிய பழங்கள் வைத்திருந்த ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், "சவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. சோதனையின்போது, அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்களது பகுதியில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறினார்.


மேலும் அனைத்து உணவங்களிலும் உணவின் தரத்தை பற்றி உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் உணவு பாதுக்காப்பு துறை சார்பாக தொலைபேசி எண், மற்றும் புகார் எண் என தனி தனியாக ஒட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இனி வரும் காலங்களில் தரமில்லாத பொருட்களை பயன்படுத்தும் உணவங்கள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement