பச்சைமலை என்றாலே இயற்கை, சூழல் நம்மை மயக்கும். குறிப்பாக பட்டாம்பூச்சிக் கூட்டம், மலைவாழ் மக்கள், தேன், பலாப்பழம், பெரிய ஆலமரங்கள், அதில் விளையாடும் சிறுவர்கள் எனப் போகிற வழி முழுக்கவும் கட்டடங்கள் ஏதுவுமில்லாமல் ஆத்மார்த்தமான, இயற்கையோடு இணைந்த தூய்மையான மூலிகை வாசம் காற்றுடன் கலந்து வரும்போது மனதிற்கு குளிச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பச்சைமலை சுமார் 19,076 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் இருக்கிறது இம்மலை. இது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மனத்தை கொல்லைகொள்ளும் அளவிற்கு பறவைகள், வண்ணத்துப்பூசிகள் அதிகள் அளவில் காணப்படும். வண்ணத்துப்பூசிகளின் கணக்கெடுப்பு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்.




இந்நிலையில்  திருச்சி மாவட்டம் , துறையூர் பச்சமலை மலைப்பகுதியில் வசிக்கும் வண்ணத்துப்பூச்சி இனங்கள் குறித்த கணக்கெடுப்பு 2 நாட்கள் நடந்தது. திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில், மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில், துறையூர் சரக வன அலுவலர்கள் ஒருங்கிணைப்பில் கோவை தி நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டியைச் சேர்ந்த பாவேந்தன், தெய்வப்பிரகாசம், ஸ்ரவன்குமார், சிவ நிஷாந்த், ரமணாசரன், சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.




மேலும், பச்சமலை டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா, மங்கலம் நீர்வீழ்ச்சி, செண்பகம் இயற்கைப்பாதை உள்ளிட்ட பகுதிளில் நடந்த இந்த கணக்கெடுப்பில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பச்சமலையில் நடந்த இக்கணக்கெடுப்பில் 109 இனங்களைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சிகள் அனைத்தும் தாவிகள், துள்ளிகள், அழகிகள், வெள்ளையன்கள், புல்வெளியான்கள், நுனிச் சிறகன்கள், வரியன்கள், சிறகன்கள், வசீகரன்கள், உலோக மின்னிகள் என்ற 6 முக்கிய குடும்பங்களைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் ஆகும்.




மேலும் இதே குடும்பங்களின் துணை குடும்பங்களான வரியன்கள், கருப்பன்கள் வகையைச் சேர்ந்த ஏராளமான பட்டாம் பூச்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த துணை குடும்பங்களைச் சேர்ந்த கண்ணாடி வரியன், கருநீல வரியன், நீல வரியன், வெந்தய வரியன், ஆரஞ்சு வரியன், வெண்புள்ளி கருப்பன் ஆகிய இன பட்டாம்பூச்சிகள் இங்கு வடகிழக்கு பருவமழை தொடங்கிய உடன் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடம் பெயரும். அரிய வகை பட்டாம்பூச்சிகள் என கருதப்படும் பல வகையான இனங்கள் பச்சமலையில் அதிக எண்ணிக்கை இயற்கை சார்ந்த நல்ல குறியீடு ஆகும். பச்சமலையில் 2016ல் கணக்கெடுப்பில் 105 வகைகள் பதிவு செய்யப்பட்டன. இது இப்போது 109 ஆக உயர்ந்துள்ளது. இந்த இரு கணக்கெடுப்பையும் சேர்த்து 127 இன பட்டாம்பூச்சிகள் பச்சமலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலே அப்பகுதி சுற்றுச்சூழல் நல்ல நிலையில் உள்ள பகுதியாகும். அதேபோன்று, பாதுகாப்பான மற்றும் அமைதியான வண்ணத்துப்பூச்சி சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகவும் பச்சமலை இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இயற்கை சூழலும், வண்ணத்துப்பூசிகளை பாதுக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக வன துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.