திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த  புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு  திருமணம் ஆகியுள்ளது. மேலும் இவருக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு  தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் ஸ்ரீபதி உறுதியாக இருந்துள்ளார். மேலும் ஸ்ரீபதியின் கணவர் மற்றும் நண்பர்கள்  உதவியுடன் பிரசவம் ஆன 2-வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார். தற்போது  வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன்மூலம் ஜவ்வாது மலையில் 22 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


 




 


இந்த நிகழ்வு குறித்து  ஐவ்வாது மலையில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரல்


மலைக்கிராம பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி ஸ்ரீபதி ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று, பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் தொடர்ந்து படித்தார். இதுகுறித்து  மலையும், மாவட்டமும், தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் அவருடைய வயதா அல்லது அவருடைய இனமா, அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா மூன்றுமே எனலாம். ஆனால் நான் உண்மையிலேயே அதிர்ச்சியில்  இந்தத் தகவலைக் கேட்டபோது, ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியிலேயே தான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டு தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார். மருத்துவரின் ஆலோசனைப்படி பத்திரமாக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன். அவர் சென்றாரா இல்லையா என்றுகூட கேட்கவில்லை.


 




யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம். ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே எல்லாமே உள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி சென்னை சென்று தேர்வு எழுதினார். தற்போது  வெற்றிவாகையும் சூடியிருக்கிறார். உண்மையாகவே நினைத்துப்பார்த்தால் "ஏய் ...எப்புட்றா" என்று சொல்வதற்குமுன் தொண்டைக்குழிக்குள் திக் திக் அடிக்கிறது. இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று. அதைவிட பெருமைப்படவும், பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் இணையர். புள்ளதான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார் எனப் பாராட்டியுள்ளார்.