திருவண்ணாமலை அதிமுக பிரமுகர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை புதியதாக பொறுப்பேற்ற நகர டிஸ்பி கொள்ளையடித்த 2 இளைஞர்கள் அவர்களுக்கு உதவிய பெற்றோர் உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.


அதிமுக பிரமுகர் வீட்டில் நகை கொள்ளை


திருவண்ணாமலை குபேரநகரை சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகன் என்பவர் தனது மகள் நிச்சயதார்த்திற்கு கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். மறுநாள் காலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முருகன் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்தநிலையிலும், பீரோவின் கதவு உடைக்கப்பட்டு மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 35 பவுன் நகை 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அதிமுக பிரமுகர் முருகன் திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருடு போன வீட்டில் தடவியல் நிபுணர்கள் கைரேகையை சேகரித்தனர். அதனை தொடர்ந்து ஆய்வாளர் விஜயபாஸ்கரன், துணை ஆய்வாளர் பாபு மற்றும் 5 காவல்துறையினர் கொண்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திருட்டு நடைபெற்ற வீட்டில் பதிவான கைரேகை, ஏற்கனவே குற்ற வழக்கில் பதிவாகி இருந்த வேங்கிக்கால் இந்திரா நகரை சேர்ந்த ரஞ்சித்தின் கைரேகையுடன் ஒத்துப்போவது தெரியவந்தது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில்




நகை கொள்ளை அடித்தவர்கள் கைது


நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் துணை ஆய்வாளர் நஸ்ருதீன் தலைமையில் கொண்ட காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு இவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரஞ்சித் மற்றும் அவருடைய நண்பர் கிருஷ்ணா நகரை சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோர் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து ஊர்சுற்றி வருவது தெரியவந்தது.  மேலும் இவர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடிவந்த  தனிப்படையினர் இவர்கள் திருவண்ணாமலை தீப நகரில் இருப்பது குறித்து  தெரியவந்தது. உடனடியாக தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு இந்த வழக்கு தொடர்புடைய ரஞ்சித் வயது (19) அவருடைய நண்பர் ஸ்ரீராம் ஆகியோரை பிடித்து திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரஞ்சித் மற்றும் ஸ்ரீராம் இருவரும் முருகன் வீடு பூட்டியிருப்பதை கண்டு இரவு நேரத்தில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடித்து விட்டு இங்கு இருந்தால் மாட்டிக்கொள்வோம் என எண்ணி கொள்ளையடித்த பணத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் ரஞ்சித் அவருடைய தாய் தந்தை ஆகியோரையும் சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து ரஞ்சித் அவருடைய நண்பர் ஸ்ரீராம் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ரஞ்சித்தின் தந்தை சிவா, தாய் அமுதா ஆகிய 4 போரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.




புதிய டிஎஸ்பி அதிரடி பொதுமக்கள் பாராட்டு


இவர்கள் 4 போரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது; ரஞ்சித், ஸ்ரீராம் ஆகிய இருவரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு கோட்டைப்பாளையம், நேதாஜி நகர், கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இவர்கள் மீது கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது எனவும், இவர்களை 2 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த உள்தகவும் தெரிவித்தார். திருவண்ணாமலை சுற்றிலும் கடந்த 6 மாதமாக தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி வந்தனர். அவர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துவந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பாக புதியதாக நகர துணை காவல் கண்காணிப்பாளராக ராமச்சந்திரன் பதவி ஏற்ற பிறகு திருடு போன 5 நாட்களிலேயே கொள்ளையர்களை பிடித்து அதிரடியை காட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து  நகர துணை காவல் கண்காணிப்பாளராக ராமச்சந்திரனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இவர் பல குற்றவாளிகளை கைது செய்து பறிகொடுத்த மக்களின் நகைகளை மீட்டு தருவர் என பொதுமக்கள் நம்பியுள்ளனர்.