திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் அதில் தரிசன கட்டணம் உயர்த்த முடிவு செய்திருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருஅண்ணாமலையார் கோயில் (Annamalaiyar Temple)

திருஅண்ணாமலையார் கோயில் (Annamalaiyar Temple)  என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் திருவண்ணாமலையார் (வடமொழியில் அருணாச்சலேஸ்வரர்) என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். நினைத்தாலே முக்தி தரும் தலம் எனும் பெருமையைக் கொண்ட தலமாகவும் அறியப்படுகிறது.

இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

அபிஷேக கட்டணம் 5,000 ரூபாயாக உயர்த்த முடிவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அண்ணாமலையார் கோவிலிற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கலெக்டர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தற்போது நடைமுறையிலுள்ள அபிஷேக கட்டணம், 2,500ல் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தவும், சிறப்பு தரிசன டிக்கெட், 50 ரூபாயிலிருந்து, 100 ரூபாயாக உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பவுர்ணமி நாட்களில் அதிக பக்தர்கள் வரும் சூழல் உள்ளது. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து வரும் நிலையில், நிர்வாக அனுமதியோடு சில பணிகளை, புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். முதலில் பிரேக் தரிசனத்தை கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.

50 ரூபாய் கட்டணத்தை 100 ரூபாயாக உயர்த்த முடிவு

பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்றார் போல், தரிசன நேரத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளோம். அந்நேரங்களில், பிரேக் தரிசனத்தை செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 ரூபாய் கட்டணத்தை, 100 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அபிஷேகம் போன்ற நேரங்களில் காலதாமதம் ஏற்படும்போது, வெளிமாநில பக்தர்களுக்கு ஒலி, ஒளி அமைப்பு மூலம், தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும்.

20 ஆண்டுகளுக்கான தொலை நோக்குடன் திட்டம்

இன்னும், 20 ஆண்டுகளுக்கான தொலை நோக்குடன் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 200 கோடி ரூபாய் செலவில் பெரும் திட்ட பணி செய்ய ஆய்வு செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது. உயர்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதலின்படி, அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படும். குழு நியமனம் தாமதப்படுவதால், எந்த பணியும் பாதிக்காது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.