தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்ற அண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் ஆகியோரை தரிசித்தனர்.அப்போது, அவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.


 


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை


பாரத பிரதமர் இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் கடும் தவத்தில் இருந்தார். அதே போல் இன்று பாராளுமன்ற கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று அண்ணாமலையார் கோயில் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி வெற்றி பெற்று வர வேண்டும் என்ற வேண்டுதலை மேற்கொண்டு இன்று சாமி தரிசனம் செய்தோம். திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி வெள்ளை துரை நேற்று காலையில் ஓய்வு பெறும் நாள் அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் திரும்ப பெறப்பட்ட நிலை, அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஓய்வு பெரும் நாளன்று பணி இடை நீக்கம் செய்யப்படுவது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே பார்க்கிறேன். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியான மேற்கொண்டு உள்ளதை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயல்கிறது.


இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை


யார் வேண்டுமானாலும் அரசியல் அமைப்பு சட்டப்படி தாங்கள் விரும்பியதை செய்து கொள்ளலாம், இதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை, இன்று டெல்லியில் நடைபெற உள்ள எதிர்க்கட்சியில் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை, இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர், இன்றோடு இறுதிக்கட்ட தேர்தல் முடிவடையும் நிலையில் இன்று வெளியாக உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூட காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியினர் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளது. அவர்களுக்கு 543 தொகுதிகளும் எந்த பக்கம் செல்லும் என்பது இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் தெரியும்,


மோடி கன்னியாகுமரி வருகையை அரசியல் செய்கின்றனர்


தேர்தல் முடியும் வரைதான் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கூறி வந்துள்ளனர். காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் விதமாகவே உள்ளது. தேர்தல் நடக்கும் வரை தான் அவர்களது நாடகம் அது இன்று முடிந்து விட்டது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் மோடி கன்னியாகுமரி வருகையை அரசியல் செய்கின்றனர். பிரதமர் அங்கே தியானம் மேற்கொண்டாலும் பொதுமக்கள் தங்கு தடையின்றி விவேகானந்தர் பாறைக்கு சென்று வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.