இளைஞர்கள் மத்தியில் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல் மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனையில் நூலகம் அமைத்துள்ளார். இங்கு சிகிச்சைக்கு வரும் நபர்கள் காத்திற்கும் பொழுதை பயனுள்ளதாக அமைக்க ஏதுவாக பல புத்தகங்கள் இங்குள்ளது. புத்தகம் மனிதனை நல்வழிப்படுத்த சிறந்த ஆயுதமாக உள்ளது புத்தக வாசிப்பு பழக்கத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு வர அரசியல் தலைவர்கள் முதல் ஆளுமைகள் முதல் அனைவரும் தங்களால் இயன்ற பல முயற்சிகளை அரசுடன் இணைந்தும் தனியாகவும் செய்து வருகின்றனர். நாளைய தலைமுறை கடலில் மூழ்கும் கப்பலை போன்று செல்போன்களில் மூழ்கி வருகின்றனர். இவர்களை மீட்கும் நீர்மூழ்கி கப்பலாக இருக்க வேண்டிய புத்தக வாசிப்பு  பழக்கத்தை ஏற்படுத்த வாசகர் வட்டங்களை விரிவுபடுத்த வேண்டியது. நாம் அனைவரின் தலையாய கடமையாகும் அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பல மருத்துவர் பெரில் என்பவர் தனது சிறிய மருத்துவமனையில் நூலகம் ஒன்று அமைத்துள்ளார்.




புன்னை நகரில் செயல்பட்டு வரும் இவரது மருத்துவமனையில் இவரிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் அவருடன் வருபவர்கள் தாங்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் தமிழ் இலக்கியம், தமிழ் நாவல்கள், பொதுஅறிவு புத்தகங்கள், ஆங்கில நாவல்கள், வரலாற்று ஆய்வுக் குறிப்புகள், மனநலம் சார்ந்த புத்தகங்கள், மருத்துவம் சார்ந்த புத்தகம், குழந்தைகளை கவரும் குழந்தைகளுக்கான புத்தகம் மதநல்லிணக்க புத்தகங்கள் என பல தலைப்பில் 500க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன பல பெரிய மருத்துவமனைகளில் நூலகங்கள் இருக்கலாம் ஆனால் உறுப்பினர் சேர்த்து புத்தகங்களை கடன்பெற்று வீட்டிற்கு கொண்டு செல்லும் வசதிகள் இல்லை ஆனால் இந்த நூலகத்தில் சுமார் 50 பேர் உறுப்பினர் அட்டை பெற்று தினசரி புத்தகங்கள் எடுத்து செல்கிறார்கள்.




இது குறித்து நகர்கோவிலை சேர்ந்த மருத்துவர் பெரில் கூறுகையில், எனது தாய் கல்லூரி ஒன்றில் நூலகராக பணியாற்றி வந்ததால் நான் சிறு வயது முதல் அதிக அளவில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தேன். நான் படித்து இன்புற்ற புத்தகங்களை என்னை நாடி வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றுள்ளேன். ஏராளமான மக்கள் இங்கு வரும்போது புத்தகங்களை பார்த்து படித்து அதனை எடுத்தும் செல்கிறார்கள். புத்தக வாசிப்பு பழக்கத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு வருவதற்கு பலரும் பல விழிப்புணர்வு யுத்திகளை கையாண்டு வரும் நிலையில்  என்னால் முடிந்த ஒரு சிறிய பணியை நான் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.