திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவர் சன்னதி அருகே சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தரிடம் 36 சவரன்  தங்க நகை மற்றும்  40 ஆயிரம் பணத்தை மர்ம நபர் பின்னால் இருந்து பிளேடால் பையை அறுத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

                               

 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும்  நாள்தோறும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இன்று  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகரைச்  சேர்ந்த ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் கணேசன் (76) தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். குடும்பத்துடன் வெளியூர் செல்வதால் பாதுபாப்பு கருதி வீட்டில் இருந்த 36 பவுன் 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை காரைக்குடியில் இருந்து கிளம்பி  மாலை திருச்செந்தூர் வந்துள்ளார்.                           

 

 





திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கி விட்டு நேற்று காலை  9.30 மணியளவில் அவர் கொண்டு வந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்றள்ளார். கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் சென்ற அவர் மூலவர்,  சண்முகர் சன்னதியில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தங்க கொடிமரம் அருகே வந்தபோது கைப்பையை பார்த்துள்ளார். அப்போது  கைப்பையில் ஓரத்தில் பிளேடால் வெட்டி அதனுள்ளே இருந்த 36 பவுன் 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரியவந்தது.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவில் காவல் நிலைய போலீசார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்

                           

 

இந்த நிலையில் கணேசன் மகா மண்டபத்தில் மூலவர் சன்னதி அருகே தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது பின்னால் நின்ற சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் இருந்து பிளேடை எடுத்து கையை அறுத்து தங்க நகைகள் ரொக்கப் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தரிடம் பணம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


                               

 

நேற்று திருச்செந்தூர் கோயிலில் அதிகளவு பக்தர்கள் இல்லாததும் கொள்ளையனுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்து வரும் காவல்துறையினர் இவர்களது குடும்பத்தை தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுப்பட்டாரா, யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.