தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.O தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார்.




தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கலந்துகொண்டு தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டு பேசும்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் தமிழ்நாடு அரசு டாடா குழுமத்துடன் இணைந்து மாநிலம் முழுவதும் இருக்கின்ற 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக ஒரு தொழில் வளாகம் தொழில் 4.O ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு இன்று முதல் கட்டமாக 21 தொழில்பயிற்சி மையங்களில் தொழில் வளாகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவரை அரசு தொழிற்பயிற்சி மையங்களில் இல்லாத அளவுக்கு 5 டிரேடுகளில் நீண்ட கால பயிற்சியும், 23 டிரேடுகளில் குறுகிய கால பயிற்சியும் அளிக்க இருக்கிறார்கள். 





நவீன தொழில்நுட்பங்களான ரோபோட்டிக்ஸ், 3டி பிரிண்டிங், மின் வாகனங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. டாடா குழுமம் மட்டுமல்லாமல் 21 குழுமங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் வளாகம் தொழில் 4.O நிறுவப்பட உள்ளது. முதல்கட்டமாக கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று தொழில் வளாகம் நிறுவப்பட்டு நிறைய உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.




தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மைய கட்டிடடம் ரூ.3.73 கோடி மதிப்பில் 10572.85 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் இ.வி. இயந்திரம், சி.என்.சி. இயந்திரம், வி.எம்.சி. இயந்திரம், லேசர் இயந்திரம், பெயிண்ட் பாத் இயந்திரம், ரோபோட்டிக்ஸ் இயந்திரம், பிளம்பிங் இயந்திரம், ஆட்டோ எம்.ஆர்.ஓ. மற்றும் பி.சி. இயந்திரம் ஆகிய 8 வகையான இயந்திரங்களுக்கான பணிமனை, அலுவலர் அறை, வி.டி.ஏ.டி. ஸ்டூடியோ/கூட்டரங்கம், சர்வர் அறை, வி.எஸ்.ஏ.டி. வகுப்பறை, ஐ.ஓ.டி. வகுப்பறை, பி.வி.ஏ. இயந்திர வகுப்பறை, பி.டி.டி. வகுப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


தற்போதைய காலகட்டத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த மாணவர்கள் வேலை தேடி பெரிய நிறுவனங்களுக்கு செல்லும்போது அங்குள்ள புதிய தொழில்நுட்பங்களை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இன்றைய தினம் முதல் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் எல்லாம், தொழில் 4.O மூலம் தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே உள்ளது. அதேபோல் நாகலாபுரம், வேப்பலோடை, திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 


விரைவிலேயே அந்த தொழில்பயிற்சி நிலையங்களுக்கும் தொழில் 4.O விரிவுப்படுத்தப்படும். இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். குறுகிய கால, நீண்ட கால பயிற்சிகளின் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப தூத்துக்குடியிலேயே மாணவர்களுக்கு பயிற்சிகள் கிடைத்துவிடும்" என்றார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான்தோழன், உதவி செயற்பொறியாளர் கங்கா பரமேஸ்வரி, கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.