தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆறாவது பெரிய மாநகராட்சியான நெல்லை மாநகராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் இரவு முதல் அமலுக்கு வந்தது, இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகிறது, நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் இருக்கும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என 100 பேர்  இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 




நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்,  தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு தலைமையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக தேர்தல் விதிமுறை மீறல்கள் இல்லாமல் செயல்படுவது தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.



கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறும் பொழுது,  நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளில் 397 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்குசாவடி 259, பெண் வாக்கு சாவடி 259, அனைத்து வாக்குச்சாவடி 414, என  மொத்தம் 932 வாக்கு சாவடிகள் உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை மாநகராட்சியில் 4 குழுவும், 3 நகராட்சியில் 3 குழுவுமாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.


பேரூராட்சிகளுக்கு தனியாக 10 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது இன்று அதிகாலை முதல் பறக்கும் படை கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் கட்டுபாட்டு அறை நாளை முதல் செயல்படும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 131 பதட்டமான வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 274 வாக்கு சாவடிகள் பதட்டமானதாக கண்டறியபட்டுள்ளது. 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1600 பேர் புறநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் 7  சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1168 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.




நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 397 வார்டுகளுக்கு நேரடி தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர், குறிப்பாக  நெல்லை மாநகர பகுதியில் 55 வார்டுகளுக்கு 2,03,879 ஆண் வாக்காளர்களும், 2,12,473 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 37 என மொத்தம் 4,16,369 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வார்டுகளில் 14,689 ஆண் வாக்காளர்களும், 15,739 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 30,430 வாக்காளர்களும், களக்காடு நகராட்சியில் 27 வார்டுகளில் 12579 ஆண் வாக்காளர்களும், 13,575 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,156 வாக்காளர்களும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளில் 20,790 ஆண் வாக்காளர்களும், 22,144 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 42,934 வாக்காளர்களும், 17 பேரூராட்சிகளில் 273 வார்டுகளில் 1,15,984 ஆண் வாக்காளர்கள், 1,22,601 பெண் வாக்காளர்கள், 10 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,38,595 வாக்காளர்களும் உள்ளனர். மொத்தமாக நெல்லை நகர்ப்புற தேர்தலில் 3,67,921 ஆண் வாக்காளர்கள், 3,86,532 பெண் வாக்காளர்கள், 51 இதர வாக்காளர்கள் என 7,54,504 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.


திருநெல்வேலியில் ஒவ்வொரு பகுதிகளிலிம் அமைக்கப்பட்டுள்ள வார்டுகள்


திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சி - 1


திருநெல்வேலி மாநகராட்சி - 55 வார்டுகள். 


நகராட்சிகள் - 3 


1. அம்பாசமுத்திரம் - 21
2. விக்ரமசிங்கபுரம் -21
3. களக்காடு - 27 


பேரூராட்சிகள் - 17


1.பணகுடி - 18
2.வடக்கு வள்ளியூர் - 18
3.திசையன்விளை - 18
4.ஏர்வாடி - 15
5.மூலக்கரைப்பட்டி - 15


6.திருக்குறுங்குடி - 15
 7.சேரன்மகாதேவி - 18
 8.மணிமுத்தாறு - 15
 9.சங்கர் நகர் - 12
 10. வீரவநல்லூர் -  18
 11. பத்தமடை - 15
 12.மேலச்செவல் -15
 13. முக்கூடல்  - 15
 14. கல்லிடைகுறிச்சி - 21
 15. கோபாலசமுத்திரம் - 15
 16. நாங்குநேரி - 15
 17. நாரணம்மாள்புரம் - 15