நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்திலுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதமாக பாபநாசம் அருகேயுள்ள கோட்டைவிளை பட்டி, அகஸ்தியர்புரம், சிவந்திபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றையாகவும், ஜோடியாகவும் கரடிகள் இரவு நேரங்களில் சுற்றி திரிகின்றன. கரடிகள் இரவு நேரங்களில் உலா வரும் வீடியோக்களும் தொடர்ச்சியாக சமூகவலைத் தலங்களில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதனால் பாபநாசம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இரவு கோட்டைவிளைபட்டி நடுத்தெருவிலுள்ள குமார் என்பவரின் வீட்டில் முன்பகுதியில் இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்துள்ளன. இந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்தநிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் விக்கிரமசிங்கபுரம் முதலியார்பட்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பொழுது மெயின் சாலையில் ஒற்றை கரடி ஒன்று உலா வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வழியாக செல்லும் பயணிகள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்களை இந்த சாலையில் கரடி நிற்கிறது. பார்த்து வாருங்கள் என்று சத்தம் எழுப்பினர். பின் அங்கிருந்த கரடி சாலையில் இருந்து தெரு வழியாக உள்ளே சென்றது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதலங்களில் வெளியிட்டு  உள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


ஏற்கனவே ஆம்பூர், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, மூலைக்கரைப்பட்டி என பல்வேறு இடங்களில் கரடி தாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பும் விடுமுறை தினத்தன்று அதிகம் சுற்றுலா பயணிகள் குவியும் மணிமுத்தாறு பகுதியில் உள்ள சாலையில் பட்டப்பகலில் நடந்து சென்ற கரடியால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த நிலையில் கரடி அங்குள்ள மரக்கிளையில் தஞ்சம் புகுந்ததோடு 15 மணி நேரம் கழித்து இரவு 1 மணிக்கு மேல் மரத்திலிருந்து கீழே இறங்கி சென்ற சம்பவமும் அரங்கேறியது. இதே போல தொடர்ச்சியாக தற்போது கரடிகள் ஊருக்குள் சுற்றி திரிவதோடு மக்களை அச்சுறுத்தி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே வனத்துறையினர் கரடிகள் நடமாட்டத்தை கண்டறித்து அவற்றை கூண்டு வைத்து பிடித்து வனத்திற்குள் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.