நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே  ஆயன்குளத்தில்  அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை காலங்களில் உபரி நீர் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. பல நாட்கள் தண்ணீர் சென்றும் அந்த அதிசய கிணறு நிரம்பவில்லை. இதனையடுத்து இந்த அதிசய கிணறு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள ஐஐடி பேராசிரியர்களை நியமிக்கப்பட்டனர். 3 மாதங்களாக ஐஐடி குழுவினர் அதிசய கிணறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிணறுகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் டிரோன் கேமரா, கோப்ரா கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளனர். கிணறுகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகமாக உள்ளது.  மழை நீரில் உள்ள ஆக்சிஜன்  சுண்ணாம்பு பாறைகளில் வேதி வினை புரிந்து அதில் துவாரங்களை உருவாக்குகிறது. அவை நாளடைவில் பெரிய குகைகளாக மாறி உள்ளதும்  ஆய்வில் தெரியவந்துள்ளது.


சில கிணறுகளில்  கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதும், உபரி நீர் செல்ல செல்ல இந்த கால்வாய் இன்னும் நீரோட்டம் செல்லும் விரிவான கால்வாயாக மாறும் எனவும்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஆயன்குளம் அதிசய கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறு தான். இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. இந்த அதிசய கிணறு மூலமாக சுற்றிலும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகள் நீர்மட்டம் உயர்கிறது. இதே போன்ற கிணறுகள் அருகிலுள்ள பல கிராமங்களில் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளோம். கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம், ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வரை இதே போன்ற கிணறுகளை ஆய்வு செய்துள்ளோம். சில பகுதிகளில் உள்ளே கார் செல்லும் அளவிற்கு கூட பாதையில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது வந்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் அதிசய கிணற்றிற்கு திருப்பி விடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நீரை உள்வாங்கிய கிணறு தற்போது நிரம்பிய நிலையில் அதன் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்துள்ளது. பல வருடங்களாக நீரை உள்வாங்கிய அதிசய கிணறு தற்போது அதிக நீரை உள்வாங்கி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருப்பது அப்பகுதி விவசாயி மத்தியில் வேதனையையும்  மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.