செய்தி 1


நெல்லை மாவட்டம் மானூர் அருகே குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (39) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிராஜ்தீன் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 22.07.2010 அன்று குறிச்சிகுளம் குளக்கரை அருகே சுப்பிரமணியனை சிராஜ்தீன் மற்றும் அவருடைய உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த லத்தீப், நாகூர் மீரான்(42), ஜெயபிரியா ஆகியோர் சேர்ந்து அரிவாளால் தாக்கி உள்ளனர். அதனை தடுக்க சென்ற சுப்பிரமணியனின் தாயான கோமதியம்மாளை கம்பால் தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த  நிலையில் இதுகுறித்து மானூர் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இதில் லத்தீப் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். பின் ஜெயபிரியா என்பவர் நீதிமன்றம் மூலமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


இச்சூழலில் இவ்வழக்கு விசாரணையானது நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 04.09.2024 இன்று  இவ்வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி பத்மநாபன் கொலை வழக்கில் தொடர்புடைய சிராஜ்தீன் மற்றும் நாகூர்மீரான் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மானூர் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.


செய்தி-2:


 நெல்லை தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சீவலப்பேரி, ரெட்டை விநாயகர் கோவில்  தெருவை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து ராஜா (20) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்  வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும்,


அதேபோல், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தேவர்குளம், வீரமணி நாயகபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் ஆனந்தராஜ் (45) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் கொள்ளை மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும், 


வள்ளியூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வள்ளியூர், ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் அஜித்குமார்(24), ஆ.திருமலாபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மரியகன் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (34) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டிந்தனர். இவர்கள் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும்,


பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் ஈடுபட்ட பணகுடி, தண்டையார்குளம், சுபாஷ் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் முருகன் (35) என்பவர் கைது செய்யப்பட்டு இவரும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.