தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. 1979, 1980,1982 இந்த வரிசையில் முதல் மூன்று அனல் மின் உற்பத்தி அலகுகளும் தொடங்கப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளை கடந்து, அதன் ஆயுட்காலம் முடிந்தும் தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது. 1991,92 இந்த வரிசையில் 4-வது மற்றும் 5-வது மின் உற்பத்தி அலகுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் 30 ஆண்டுகளை கடந்து இந்த யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து பிரிவுகளும் அவ்வப்போது ஏற்படும் கொதிகலன் பழுது, நிலக்கரி பற்றாக்குறை போன்ற காரணங்களால் மின் உற்பத்தி நிறுத்தப்படும். மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் நிலை உள்ளது





தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மிகவும் பழமையான இந்த எந்திரங்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. சமீபகாலமாக மின்சார தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தி எந்திரங்களை இயக்கி வருகின்றனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறை அனல்மின்நிலையங்களில் இருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகையால் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.




இதுகுறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை என்ஜினீயர் கிருஷ்ணகுமார் கூறும் போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுப்பதற்காக, புளு கியாஸ் டிசல்பியூசேசன் என்ற நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுக்க முடியும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. அதன்பிறகு பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் பணி முழுமையாக முடிக்கப்படும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பணியை முடிப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் மாசு இல்லாத அனல்மின்நிலையமாக மாறும் என்று கூறினார்.




இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தூத்துக்குடி அனல்மின் நிலையம் அவ்வப்போது பழுது ஏற்படுவதும், சீரமைக்கப்பட்டு இயக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ள நிலை உள்ளது, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழமையான இந்த அனல்மின் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்போது ரூ.500 கோடி மதிப்பீட்டில் கந்தக டை ஆக்சைட் வெளியேற்றத்தை தடுக்க தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படும் என்கின்றனர். அனல்மின் நிலையங்களை தவிர்த்து அரசு மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.