தூத்துக்குடி வஉசி துறைமுக விருந்தினர் மாளிகையில் எச்எம்எஸ், ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் (ஒர்க்கர்ஸ்) ஆகிய 5 துறைமுக தொழிற்சங்கங்களின் சம்மேளன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய துறைமுக தொழிற்சங்க சம்மேளன தலைவரும், எச்எம்எஸ் சங்க தலைவருமான முகமது ஹனீப் தலைமை தாங்கினார்.




தொடர்ந்து துறைமுக தொழிலாளர்களுக்கான ஒப்பந்தத்தில் துறைமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். கூட்டத்தில் எச்எம்எஸ் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஐஎன்டியுசி உதவி தலைவர்கள் கதிர்வேல், பலராமன், வஉசி துறைமுக செயலாளர் ராஜகோபாலன், கிளிங்டன் பர்னாந்து, எச்எம்எஸ் (ஒர்க்கர்ஸ்) சங்க உதவி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கிளிங்டன் பர்னாந்து, சிஐடியு சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் ரசல், ஏஐடியுசி தலைவர் சரவணன், நிர்வாகிகள் பிரகாஷ்ராவ், பாலசிங்கம், துறைமுக ஆணைய உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சத்ய நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




இதுகுறித்து அகில இந்திய துறைமுக தொழிற்சங்க சம்மேளன தலைவர் முகமது அனீப் தூத்துக்குடி வ.உசி. துறைமுக விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, போனஸ் ஒப்பந்தம் நாடு முழுவதும் உள்ள 11 பெருந்துறைமுகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ்(தொழிலாளர்கள் சங்கம்) ஆகிய 5 துறைமுக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் பெருந்துறைமுகங்களில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.




இதனை தொடர்ந்து மத்திய அரசு, துறைமுக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு 2021-ம் ஆண்டு முதல் 2026- வரை துறைமுக தொழிலாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து துறைமுக அதிகாரிகள் ஏற்கனவே கையெழுத்து இட்டு உள்ளனர்.




அதே போன்று ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நவம்பர் 6-ம் தேதி டெல்லியில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லையெனில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.