‘என்னை தீவரவாதி போல் சித்தரிக்கின்றனர்’ - நெல்லையில் சீறிய சீமான்

'மக்களுக்கான அரசு உருவாக வேண்டும், அது நாம் தமிழர் கட்சியின் அரசாக இருக்கும். செய் அல்லது செத்து மடி என்பது பழசு; செய் அல்லது சாகடி என்பது எங்கள் கோட்பாடு' - சீமான்

Continues below advertisement

தமிழ் தேச தன்னுரிமை கட்சியின் தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு  நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

Continues below advertisement

அப்போது பேசிய அவர், தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வறிக்கைகள் சொல்கிறது. தமிழ் முன்னோர்கள் வைத்திருந்த வாளை நம்மால் இப்போது தூக்க கூட முடியாது. ஆனால் அந்த காலத்தில் அவர்கள்  வாளைதூக்கி குதிரை மேல் நின்று வீசியுள்ளனர். பீட்சா, பர்கர் சாப்பிடும் நம்மால்  அதனை தூக்க கூட முடியாது. தமிழனுடைய அறிவு நெற்களஞ்சியம் போல்  உலகம் முழுவதும் கொட்டி கிடக்கிறது. தமிழில் எழுதிவைத்த பாக்களை படித்து பார்த்து திட்டம் போட்டால் நாடு நலனாக இருக்கும். 6 லட்சம் கோடி  தமிழக அரசுக்கு கடனிருக்கும் போது 80 கோடியில் பேனா வைக்க திட்டம் போடுகிறார்கள். கலைஞர் நினைவிடம் அருகே பேனா நினைவுச் சின்னம் வைக்கப் போவதை விமர்சித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், இலங்கையில் அதிகாரமும் இல்லை, அரசும் இல்லை. இந்த நிலையிலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்ததாக கேரள மீனவர்கள் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டது கிடையாது. அதற்கு காரணம் கேரளாவின் ஆட்சியாளர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்கள். தமிழகத்தில் வெளியே இருந்து வந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள். இந்த மண்ணை சேர்ந்த 2 பேர் அடிமையாகி இருக்கிறார்கள் என விமர்சித்தார். பெருந்தலைவர் காமராஜர் பல்லாயிரம் படிப்பகங்களை திறந்து படிக்க வைத்தார். திராவிட மாடல் பல்லாயிரம் குடிப்பகங்களை திறந்து குடிக்க வைக்கிறது. நீரை தேக்கி வைக்க பல வழிகள் இருந்தும் அதனை செய்யாமல் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள். ஓடி வரும் நதியில் நமக்கு தேவையான நீரை சேமிக்கும் நிலை என்று உருவாகிறதோ அன்று தான் நாடு உருப்படும். என்னை தீவரவாதி போல் சித்தரிக்கின்றனர். ஜப்பானில் கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். அந்த தொழில் நுட்பத்தை ஏன் நாம் பயன்படுத்தமுடியவில்லை. காற்றாலை சூரிய ஒளி மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் செய்கிறது. ஆனால் பாதிப்பை ஏற்படுத்தும் அணு மின்சாரம், அனல் மின்சாரம் ஆகியவையை அரசு தான் உற்பத்தி செய்கிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் அதானி வளம் பெறவேண்டும் என்ற நோக்கில் தான் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு வற்புறுத்துகிறது.

நிலக்கரியை தனியாரிடம் வாங்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது என சந்திரசேகர ராவ் சொல்கிறார். யார் அந்த தனியார் என்று பார்த்தால் அதானி. ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒளித்து கூட்டாட்சி முறையை கொண்டுவர வேண்டும். முன் எப்போது இருந்ததை விட தமிழகத்தில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருள்கள் அதிகம் பரவுகிறது. 9 காவல் நிலைய மரணங்கள் கடந்த  ஓராண்டில் தமிழகத்தில் நடந்துள்ளது. அனிதா மரணத்திற்கு அழுதவர்கள் இந்த ஆட்சியில் உயிர் நீத்தவர்கள் பற்றி ஒரு சொல்லும் சொல்லவில்லை. மத்திய அரசை அனுசரிக்கவில்லை என்றால் அங்கிருந்து பணம் வராது. இந்தியாவின் பொருளாதாரத்தை நிறைவேற்றுவதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. மத்திய அரசிடம் விமானம், ஏர்போர்ட், துறைமுகம், கல்வி என எதுவும் கிடையாது. அனைத்தும் தனியார் வசம் போய் கொண்டிருக்கிறது. சுடுகாட்டுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. நாடா ? இது சுடுகாடா என்பதே தெரியாமல் கொடுமையாக போய்கொண்டிருக்கிறது. ஒரு கார் வாங்கினால் ₹6 லட்சம் சாலை வரி எடுக்கப்படுகிறது.


தண்ணீர், சாலை மின்சாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துக்கும் வரி விதிக்கப்பட்டு விட்டு அனைத்தையும் தனியாரிடம் பெறவேண்டியுள்ளது. மாங்கிபாத் என மூடிய அறையில் பேசுவதை விட்டு விட்டு பிரதமர் செய்தியாளரை சந்தித்து பேசவேண்டும். நாங்கள் கேட்பது தமிழ் தேசியத்திற்கான போராட்டம் அல்ல, உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை போராட்டத்திற்கான முன்னெடுப்பு. பொது வரிக்கான கணக்கு கட்டாயம் காட்டவேண்டும். எல்லா உரிமையையும் இழந்துவிட்டு அடிமையாக வாழ நாங்கள் தயாராக இல்லை. சுதந்திரத்திற்காக பல போராட்டங்களை தமிழர்கள் கண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்டத்திற்காக செய்தது என்ன என்பது குறித்து சொல்ல வேண்டும். வெள்ளைக்கார ராணிகள் வரும்போது குச்சி வைத்து அணிவகுப்பு மரியாதை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். காஷ்மீர் இஸ்லாமியர்களை இந்திய நாட்டில் சேர சொல்பவர்கள் இங்குள்ள இஸ்லாமியர்களை வெளிநாட்டிற்கு செல்ல சொல்கிறார்கள்.

அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர். எல்லோருக்குமான அரசு என்பது இந்தியாவில் இல்லை. மக்களுக்கான அரசு உருவாக வேண்டும். அது நாம் தமிழர்கட்சியின் அரசாக இருக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகனுக்கு முடி சூட்ட காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சி ஆரம்பித்தால் அவரது மகன் மனைவி கூட சேர்ந்திருக்கமாட்டார்கள். செய் அல்லது செத்து மடி என்பது பழசு செய் அல்லது சாகடி என்பது எங்கள் கோட்பாடு. இந்திய நாடு இரண்டாக பிரிக்கும் நிலை விரைவில் உருவாகும். திராவிட நாடு என இவர்கள் சொல்வதற்கு பதில் தென் இந்தியா என சொல்லிருக்கலாம். அனைத்து சட்டங்களையும், நாட்டில் பாராளுமன்ற விவாதம் செய்து கொண்டு வருவதல்ல. அனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவில் தான் அமலுக்கு வருகிறது என்று பேசினார். இதில் நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola