தென்காசி மாவட்டம்  செங்கோட்டை - இலஞ்சி சாலையில் உள்ளது கொட்டகுளம் பகுதி. இங்கு தனது மகள் வீட்டில் வசித்து வருபவர் 80 வயது மூதாட்டி ஈஸ்வரி என்ற சேவுகத்தி. இந்த நிலையில் இவர் அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மூதாட்டி ஈஸ்வரி என்ற சேவுகத்தி மீது மோதியதில் மூதாட்டி சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் நிலை தடுமாறி அவரும் சேர்ந்து கீழே விழுந்தார். இருசக்கர வாகனமானது சுமார் 300 அடி தூரத்தில் போய் பள்ளத்தில் விழுந்தது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் அனைவரும் சம்பவ இடத்தில் கூடியதோடு காயமடைந்த இருவரையும் மீட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதோடு அவர்கள் இருவரையும் அதில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


அதேபோன்று இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மூர்த்தியும் தூக்கி வீசப்பட்டு இருசக்கர வாகனம் சுமார் 300 அடி தூரத்தில் போய் பள்ளத்தில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிருக்கு போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் பெயர் மூர்த்தி என்பது தெரிய வந்துள்ளது.  மேலும் விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் சாலையை மூதாட்டி கடக்கும் பொழுது கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் நொடிப்பொழுதில் மூதாட்டியை தூக்கி வீசியதோடு அதில் இருந்த நபரும் சேர்ந்து கீழே விழும் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது. மேலும் இக்காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக்கும் வண்ணம் அமைந்து உள்ளது.