கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு 2020-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் பார்சலை எடுக்கச் சென்ற ஸரித், பார்சலை விடுவிக்க முயன்ற கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறையின் ஸ்பேஸ் பார்க்கில் அதிகாரியாக தற்காலிக பணியில் இருந்த ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர், சந்தீப் நாயர் என பலர் கைது செய்யப்பட்டனர். ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் 98 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். ஒன்றேகால் ஆண்டுகள் சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஜாமினில் இருந்து வெளியே வந்தார். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் 'அஸ்வத்தாமாவு வெறும் ஒரு ஆனையானு' என்ற தலைப்பில் 176 பக்கம் கொண்ட சுயசரிதை புத்தகம் ஒன்றை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அந்த புத்தகத்தில், "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த யு.ஏ.இ தூதரக பார்சலை விடுவிக்க உதவ வேண்டும் என ஸ்வப்னா சுரேஷ் உதவி கேட்டார். சுங்கத்துறை விஷயத்தில் நான் தலையிடமுடியாது என கூறிவிட்டேன். தங்கம் கடத்தல் வழக்கில் எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. ஸ்வப்னாவின் கல்வித்தகுதியை பார்க்காமல் ஸ்பேஸ் பார்க்கில் வேலைக்கு சேர்த்ததால் என்னை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தார்கள். 



இந்த நிலையில் சிவசங்கரைப்போன்றே தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார் ஸ்வப்னா. 'சதியுடே பத்ம வியூகம்' என்ற அந்த புத்தகத்தை திருச்சூர் கரண்ட் புத்தக நிலையம் வரும் நாளை வெளியிட உள்ளது. அந்த புத்தகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஸ்வப்னா எழுதியுள்ள சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்வப்னா தனது புத்தகத்தில், "ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் ஒரு கோயிலில் வைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். அப்போது எனது நெற்றியில் குங்குமம் வைத்து 'உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்' எனச்சொன்னார். நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன். என்.ஐ.ஏ விசாரணையின்போதும் என் கழுத்தில் சிவசங்கர் கட்டிய மஞ்சள் தாலி கயிறு இருந்தது.

 

கேரளா முன்னாள் அமைச்சர் ஒருவர் என்னை பலமுறை எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். அவர் தன்னை ஹோட்டலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன. அதை விசாரணை ஏஜென்சிகளிடமும் ஒப்படைத்துள்ளேன். பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கில் இருந்து நாம் காப்பாற்றப்படுவோம் எனக் கூறினார்கள். அதனால்தான், விசாரணை அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி மிரட்டுகிறார்கள் எனவும், அரசுக்கோ, முதல்வருக்கோ தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இல்லை' என சிறையில் இருந்து ஆடியோ வெளியிட்டேன்" என புத்தகத்தில் கூறியுள்ளார்.

 

அதே சமயம் யார் மீதும் ஸ்வப்னா பாலியல் புகார் கூறவில்லை. முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மோசடியில் ஈடுபட்டது, முன்னாள் அமைச்சர் ஜலீல், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி நளினி நட்டோ உள்ளிட்ட பலருக்கு எதிரான தகவல்களை அந்த புத்தகத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை வெளியாகும் ஸ்வப்னாவின் சுயசரிதை கேரள அரசியலில் மீண்டும் சூறாவளியை கிளப்பும் என்கிறார்கள்.