தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கு உதவி கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார்.




தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு அனுமதி அளித்தது.




இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளார். அதனை தமிழக அரசு சார்பில் அபிடவிட்டாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு உதவி கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆலை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட சிவில் கட்டுமான பாதுகாப்பு உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரி பாகங்களை வெளியில் கொண்டு செல்வது, பிற கச்சா பொருட்களையும், தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியில் கொண்டு செல்வது ஆகியவற்றை செயல்படுத்துவது தொடர்பாக இறுதி தீர்ப்பு வந்த பிறகே முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




இந்த அபிடவிட் குறித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு விளக்கி கூறுவதற்கான விளக்க கூட்டம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், உதவி மாவட்ட ஆட்சியர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாத்திமாபாபு, பிரபு, ரீகன், மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும் போது, உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவது , ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்ய அறிவுரை வழங்கி உள்ளது. இதனை மேற்கொள்வதற்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் அடங்கிய உள்ளூர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் துணை காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்ட தொழிற்சாலைகள் ஆய்வாளர், தீயணைப்புத்துறை அலுவலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்வார்கள்.


இதற்காக ஒரு ஒப்பந்தக்காரரை தேர்வு செய்து, கழிவுகளை அகற்றுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும், எவ்வளவு நாட்கள் தேவைப்படும், என்னென்ன எந்திரங்கள் தேவைப்படும் என்பது குறித்த விவரங்கள் பெறப்பட்டு கழிவுகளை அகற்ற அனுமதி அளிக்கப்படும். அதன்பிறகு ஒப்பந்தக்காரர் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்வார். இதற்கான நிதியை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கும். ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக கழிவுகள் வெளியேற்றப்படும். இதனால் அந்த வாசலில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும். இதனை உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைத்து, அதன்மூலம் கண்காணிப்பார்கள். ஸ்டெர்லைட் நிறுவன வாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும்.




ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை உள்ளூர் மேலாண்மை குழு உதவி ஆட்சியர் தலைமையில் கூடி, அந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அடுத்த வாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பார்கள். உச்சநீதிமன்றம் கூறியது போன்று, தொடர்ந்து கழிவுகளை அகற்றும் பணி நடைபெறும். இது அனைத்து தரப்பினருக்கும் விளக்கி கூறப்பட்டு உள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்றார்.


இதுதொடர்பாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன செய்தி தொடர்பாளர் கிறிஸ்ட் ஜெரால்ட் வெளியிட்டு உள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் சில பராமரிப்பு பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் காெள்கிறோம். இதன் மூலம், உள்ளூர் ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்தவும், தூத்துக்குடியைச் சேர்ந்த சிலருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் வாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடி மற்றும் இந்திய மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்ய உரிய ஆதரவும் முடிவும் எடுக்கப்படும் என்று அரசுக்கு நாங்கள் நன்றி கூறுவதுடன் நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.