மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயசந்திரன் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் நிறைவில் நீதிபதி ஜெயசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, “2017 நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த ஆணையத்தின் உறுப்பினராக  உள்ளேன். வருகிற நவம்பர் 1ஆம் தேதியுடன் என்னுடைய பதவி காலம் முடிவடைகிறது. இந்த 5 வருட காலமாக இந்த ஆணையத்திலிருந்து திருநெல்வேலி, கோயமுத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர் ஆகிய நகரங்களில் சென்று 2 மாதத்திற்கு ஒரு முறை வழக்குகளை விசாரித்து விசாரணை செய்து கொண்டிருந்தோம். இந்த நிலையில்

   நான் பதவியேற்ற  5 ஆண்டுகளில்  19,298 வழக்குகள் புகார் அடிப்படையில் பெறப்பட்டது. அந்த வழக்குகளில் ஆரம்ப நிலையிலேயே இந்த ஆணையத்தால் விசாரிக்க முடியாத ஒரு சில வழக்குகள் என 10,448  வழக்குகள் விசாரணைக்கு தகுதியற்றதாக நிராகரிக்கப்பட்டது. 8,030 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை அடிப்படையில் முடிவு பெற்றுள்ளது.


அதே போல அந்த விசாரணையில் 2,055 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. முழு அளவில் சாட்சி விசாரணையானது முடிக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகம் முழுவதும் முடிக்கப்பட்ட வழக்குகள் என 828 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் அரசு அதிகாரிகள் மீது 406 வழக்குகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் மீது பொய்யான புகார்கள் கொடுத்திருப்பதாகவும், எதிர் தரப்பு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகாத  நிலையிலும் 422 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பத்திரிகை தொலைக்காட்சி செய்தி அடிப்படையில் பல்வேறு வழக்குகள் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆணையம் பல்வேறு வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்று சுகாதாரத்துறையில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக 35 வழக்குகள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைக்காகவும் , இழப்பீடு தொகை வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வருவாய்துறையில் 14 வழக்குகள், மாநகராட்சிகள் மீது 5 வழக்குகள், மின்வாரியம் தொடர்பாக 5 வழக்குகள் ஆகியவை விசாரிக்கப்பட்டு அரசின் பரிந்துரைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் குறித்து பொதுமக்களிடம் தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 புகார்கள் ஆணையத்திற்கு வருகிறது. மனித உரிமை ஆணையம் மற்ற மாநிலங்களில் உயர் அதிகரிகள் பரிந்துரையுடன் முடிந்துவிடும். ஆனால் தமிழகத்தில் மனித உரிமை ஆணையம் ஒரு நீதிமன்றம் போல் செய்யப்படுகிறது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாநில மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது” என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண