கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறுச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலைக்கு 1144 ஹெக்டேர் கடல் பரப்பில் மணலை அள்ள அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்து திங்கள் சந்தையில் நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடந்தது.

 

 பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து கற்களை கேரளாவில் அதானி கட்டுகிற துறைமுகத்திற்கு கொண்டு சென்று வருகிறார்கள். ஆனால் கேரளாவில் அதானியின் துறைமுகத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேங்காய் பட்டிணம் துறைமுகத்தை கானொளியில் திறந்து வைத்த அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது கட்டுமான பணிகள் குறித்து நேரில் வந்து பார்த்தாரா ? 

 



 

 

மணவாளக்குறுச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலைக்கு 1144 ஹெக்டேர் கடல் பரப்பில் மணலை அள்ள திமுக அரசு அனுமதி அளித்தது. இதனால் மீனவர்களுக்கு என்ன பாதுகாப்பு, அனைத்து மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதே போன்று தான் தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் 27 மீனவர்கள் இறந்துள்ளார்கள். துறைமுகத்தை பொறுப்புணர்வோடு காட்டாமல் தான்தோன்றி தனமாக மீனவர்களிடம் கருத்து கேட்காமல் கட்டியுள்ளனர். தமிழகத்திற்கு வந்த மலேசியா நாட்டு ஆற்றுமணலை தமிழக ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் எடுக்கப்படும் கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு விற்றவர்கள் தமிழக ஆட்சியாளர்கள். கன்னியாகுமரில் ஒன்று இரண்டு என்று தற்போது 16 க்கு மேற்பட்ட கல் குவாரிகள் தனி நபர் முதலாளிகளுக்கு அரசு அதிகாரிகள் கொடுத்து உள்ளனர். கேரளாவிற்கு மட்டும் 80 லட்சம் டன் கருங்கற்கள் கொண்டு செல்லபட்டு உள்ளது. ஆனால் கேரளா ஆற்றில் மணல் அள்ளவோ, மலைகளில் பாறைகள் உடைக்கவோ அரசு அனுமதி இல்லை 

 

நாங்கள் கும்பிடும் சாமியை விட இந்த பூமியை வணங்குகிறோம். பூமியை காக்கும் கடமை எல்லோருக்கும் உள்ளது. ஆனால் பூமி தாயின் மார்பை அறுக்கிறார்கள். இதனை இவர்கள் சரி செய்யவில்லை என்றால் நாங்கள் அதிகாரத்தில் வந்து இதனை சரி செய்வோம். 

 





 

திமுக அரசு மத்திய அரசிடம் எதை தட்டி கேட்டுள்ளார்கள். நாங்கள் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. 8 கோடி மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் செய்யவில்லை என்றால் அதனை தடுக்கும் தைரியம் இவர்களிடம் உண்டா. 

 

ஆற்று மணலை அள்ளித்தான் உங்கள் பாட்டன் வீடு கட்டினானா, தமிழ்நாட்டு தேவைக்கு மட்டும் தான் அள்ளி விற்கப்பட்டதா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு விற்றார்கள். அரசே பொறுப்புணர்வோடு மணல் அள்ளியிருந்தால் இப்போதைய பிரச்னை வந்திருக்காது. இதற்கு தீர்வு மணல் கொள்ளைக்கு துணை நின்ற இவர்களை தூக்கி அந்த குழியில் மூட வேண்டும்

 

மலேசியாவில் ஆற்று மணலை தருகிறேன் என்றார்கள் இவர்கள் ஏன் அனுமதிக்கவில்லை. அதனை அனுமதித்தால் இங்கே கனிம வளங்கள் கொள்ளை அடிக்க முடியாது” என குற்றம் சாட்டினார்