தூத்துக்குடி தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு அருகில் உள்ள திடலில் 4 நாட்கள் நெய்தல் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது.


சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் கனிமொழி எம்.பி. பேசும்போது, மனித உயிர் தோன்றியதே கடலில் இருந்து தான், அதனால் அந்த கடலுக்கு நன்றி கூறும் வகையில் இந்த நெய்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடல் இல்லையென்றால் வேறு எதுவுமே கிடையாது. நம்முடைய பெருமை எல்லாம் உலகுக்கு சென்று சேர்ந்ததும் இந்த கடல் வழியாகத்தான். தமிழர்களின் பெருமையை சொல்லக்கூடிய நிலம் மட்டுமின்றி, மனித உயிர்கள் தோன்றி இந்த மண்ணுக்கு வந்த நிலம் நெய்தல் நிலம் ஆகும்.




மனித உயிர் தோன்றியபோது, தங்களை வெளிப்படுத்திக் கொள்ள, வாழ்க்கையை பதிவு செய்து கொள்ள கலைகள்தான் உதவியாக இருந்தன. மனித குலத்தை பதிவு செய்து வைத்து இருக்கக்கூடிய பதிவுகளை, அதில் உள்ள உணர்வுகளை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க பயன்படுவது கலைகள். அதனால்தான் மண்சார்ந்த கலை வடிவங்களை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நமது பாரம்பரிய உணவு, இந்த மண்ணில் வாழக்கூடிய மனிதர்களுக்கு ஏற்ற உணவு என்ன என்பதை அந்த மண் விளைவித்து தரும். இந்த மண் உங்களுக்கு எதை தருகிறதோ, உங்கள் வாழ்க்கை உங்களுக்கு எதை கற்றுத்தருகிறதோ, அதை நினைவுபடுத்திக் கொள்ளும் விதமாக நம் கலைகள், உணவு வகைகள், கைவினை பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கிராமிய கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து கணேஷ்கா சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சகா கலைக்குழு, காஞ்சி கைச்சிலம்பாட்ட கலைக்குழு, செவி இசைக்குழு-ஆதிமேளம், தேன்மொழி ராஜேந்திரன் கரகம், நையாண்டி மேளம், ஐந்திணை ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோன்று கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40 அரங்குகளுடன் கூடிய உணவுத்திருவிழாவும் நடந்தது.