நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திமுக பேச்சாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அரசு பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த ஒன்பது மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா ஆகியவை நெல்லை திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கட்சி பேச்சாளர்களுக்கு நிதி உதவி ஆகியவையை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழங்கினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், அமெரிக்காவில் திமுக தலைவர் இருந்தாலும் கூட கட்சியின் நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை கேட்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அமெரிக்காவில் இருந்தாலும் தொண்டனையும், கட்சியையும் பற்றி சிந்திக்க கூடியவர் தான் நம்முடைய தலைவர். இதைப்பற்றி தெரியாத சிலர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு போயிருக்கிறார். 


புதுப்புது எதிரிகள் தோன்றியுள்ளனர்:


இதற்கு போய் இருக்கிறார், அதற்கு போய் இருக்கிறார் என பொறாமையில் பேசி வருகிறார்கள். திமுகவை பார்த்து எல்லோரும் பொறாமை பட ஆரம்பித்து விட்டார்கள். நாளுக்கு நாள் ஆட்சிக்கு பெருமை கிடைத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் திமுக கொடி பட்டோலி வீசி பறந்து வருவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் நாளுக்கு நாள் அறிக்கையை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கட்டுக்கோப்பான இயக்கம் திமுக. தலைவர் ஒரு அறிக்கை விட்டால் கூட கட்சியில் உள்ளவர்கள் கிடுகிடுவென ஆடும் நிலை தற்போது உள்ளது. கருத்துக்கணிப்பில் கூட 100க்கு 71% முக ஸ்டாலினுக்கு மக்கள் ஓட்டு போட தயாராகி விட்டார்கள். கட்சியில் உள்ள கவுன்சிலர்கள், அமைச்சர்கள் நிர்வாகிகள் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் முதல்வருக்கு எதிராக 29 சதவீத எதிர்ப்பை கொடுத்துள்ளது. திமுகவின் வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா ஆகியவை நடைபெறும். போதெல்லாம் திமுக தான் ஆட்சியில் நூற்றாண்டு விழா கொண்டாடும் போதும் நாம் தான் ஆட்சியில் இருப்போம். புதுப்புது எதிரிகள் தோன்றியிருக்கிறார்கள் அவர்களெல்லாம் எதையும் செய்வார்கள்.


கண் தெரியாத கேஸ்வல் லேபர்:


ஆன்மீகத்தின் மூலமாக கல்வித்துறையில் ஊடுருவி பிரச்சாரம் செய்து சிறுபான்மை வாக்குகளை நம்மிடம் இருந்து பெற்று விடலாம் என்ற சதி நடக்கிறது. அதையெல்லாம் முறியடிக்கும் வல்லமை திமுக தொண்டனுக்கும், பேச்சாளர்களுக்கும் மட்டும் தான் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த ஒன்பது பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் கல்வி தரம் சரியில்லை என கூறிய குருடர் அந்த ஒன்பது பேரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏழை, எளிய மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து நீங்கள் வைத்து நெருக்கடியான நீட் தேர்வில் கூட வெற்றி பெற்று மருத்துவர்கள் ஆகியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கல்வித்தரம் எந்த அளவுக்கு தரமாக உள்ளது என்பதை கருத்து குருடராக கண் தெரியாத கேஸ்வல் லேபராக பதவி முடிந்தும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என பேசினார்.