ராமநாதபுரம் மாவட்டம்  திரு உத்தரகோசமங்கையில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. "மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்" என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது. மரகத நடராஜராக காட்சியளிக்கும், மரகதக் கல், முதலில் வீட்டுக்கு உபயோகப்படும் படிக்கட்டாகவே இருந்துள்ளது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த கல்லை பரிசோதித்த மன்னரின் ஆட்கள் அது அரிதான பச்சை மரகதக்கல் என்பதை அறிந்து, அதன்பின்பே மரகத நடராஜர் சிலையை உருவாக்கினர்.




தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிகப்பழமையான சிவாலயங்கள் உள்ளன. அதில் சமயக்குறவர்கள் என்றழைக்கப்படும் நால்வரால் பாடல் பெற்ற சிவாலயங்கள் 276 உள்ளன. இவற்றில் முதன் முதலில் பாடல் பெற்ற சிவாலயம் என்ற பெருமைக்குரியது. உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் தான். அதனால் தான், எம்பெருமான் ஈசனும் உண்ணுவதும் உறங்குவதும் இந்த உத்தரகோசமங்கை கோவிலில் தான் என்பது ஐதீகம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயமான உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவில் தான் உலகில் உருவான முதல் சிவன் கோவில் என்பதோடு சிவபெருமான் நடன கோலத்தில், நடராஜர் சிலை உருவானதும் இக்கோவிலில் தான். சைவ சமயக்குறவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசம் என்னும் ஒப்பற்ற நூலில் 38 பாடல்களில் இத்தலத்தைப் பற்றி தான் பாடியுள்ளார்.




ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். அதன் பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும். அது என்னவெனில்? 32 வகையான அபிஷேகம் செய்ததும் சுவாமிக்கு பசி எடுத்து விடுமாம். இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பின்பு அலங்காரம் நடைபெறும். சுவாமிக்கு 32 வகையான அபிஷேகம் செய்ததும் பசி எடுத்துவிடுமாம். அதனால், திருஉத்திரகோசமங்கையில் மட்டும் தான் அபிஷேகம் முடிந்ததும், நைவேத்தியம் பண்ணி பிறகு அலங்காரம் செய்வது சிறப்பான ஒன்றாகும்.பொதுவாக கோவில்களின் கருவறையில் உள்ள மூலவர் சிலையானது, பெரும்பாலும் கோவில் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு, ஒரு நல்ல முகூர்த்த நாளில், நல்ல நேரத்தில் முறைப்படி பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இக்கோவிலின் கருவரையில், முதலில் ஐந்தரை அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்து அதன் பின்பே கருவறையை கட்டி முடித்துள்ளனர் என்பது தான் ஆச்சரியம்.




இந்த ஆண்டு திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆட்சியர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், திரு உத்தரகோச மங்கை மங்களநாதசுவாமி கோவிலில் சிறப்பு வாய்ந்த மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த கோவிலில் வரும் 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒரு முறை சந்தனம் களையும் விழாவின்போது மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு களையப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மறுநாள் 20ஆம் தேதி அதிகாலை சிலை மீது மீண்டும் சந்தனம் பூசப்படும்.


கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் திரு உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கோவில் வளாகத்தில் கூட்ட நேரிசல் ஏற்படாத வகையில் போதிய பேரிகாட் தடுப்புகள் அமைத்திடவும், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், குப்பைகள் தேங்காத வகையில் சுற்றுப்புற சுகாதார தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக தயார் நிலையில் மருத்துவக் குழுக்கள் அமைத்திடவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.