'எங்க ஊருக்கு சாராயக்கடை வேண்டாம்'- பெட்டி பெட்டியாய் வந்து இறங்கிய சரக்கு.! பொதுமக்கள் ஆவேசம்.! காலில் விழுந்து கெஞ்சிய பிறகும் கடை திறப்பது எந்த வகையில் நியாயம்.!

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா  புது வயல் கிராமத்தில் அண்ணாநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடை மற்றும் பார் திறக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்களை வீட்டை காலி செய்ய சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்து வருவதாகவும்  கூறப்பட்டது.

 



 

 

எனவே, கடந்த மாதம் இந்த இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடையை திறக்க கூடாது என அந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத்திடம் அப்பகுதி பொதுமக்கள் காலில் விழுந்து,  கோரிக்கை வைத்தனர். அதற்கு மதுக்கடைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஆட்சியர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மதுக்கடை திறக்கும் அடிப்படையில் அங்கு பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள்  இன்று இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு மதுக்கடை திறக்க கூடாது என, ஆவேசமாக போலீசார் மற்றும்  அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அந்த வழியாகதான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. மதுக்கடையால் அந்த வழியாக செல்லும் பெண்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது குறித்து ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் காலில் விழுந்து  புகார் அளித்திருந்தோம். இருப்பினும் அரசு மதுபான கடை மண்டல மேலாளர் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறி கடையை திறக்க வருகின்றனர்" என கூறினர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கடை திறக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தால் மட்டுமே கடந்து செல்வதாக கோரி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 



 

ஒருபுறம் கிராம பொதுமக்கள் பெண்கள் உட்பட அனைவரும் ஒன்று திரண்டு மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், அதிகாரிகள் மதுக்கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளித்ததை  தொடர்ந்து பென்கள்  நிம்மதிப் பெருமூச்சு விட்டுச்சென்றனர். ஆனால், மறுபுறம்  இங்கிருந்து தொலைதூரம் சென்று மது வாங்க வேண்டுமே என அங்குள்ள  குடிமகன்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.