ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016-17 சம்பாநெல் பருவம் முதல் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1434.56 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ​நடப்பாண்டில் 2021-22 சம்பா நெல் பருவத்தில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.




இந்த திட்டத்தை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சம்பாநெல் பயிருக்கு ஏக்கருக்கு 326.15 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். காப்பீட்டு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 21,743.32 வரை கிடைக்கும். பிரீமியம் தொகையை டிசம்பர்  15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது இருந்தது. இதுவரை மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.


விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் மூவிதழ் அடங்கல் படிவத்தை பெற்று அத்துடன் விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு விபரம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நிர்ணயிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மற்றும் விவசாயிகளின் வங்கி கணக்கு உள்ள பொது உடமை வங்கிகளை தொடர்பு கொண்டு பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகையை விடவும் குறைந்த தொகையை காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது இது ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில்,கடந்தாண்டு பெய்த பெரு மழையால் சேதமான பயிர்களுக்கு தேசிய காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.100, ரூ.150, ரூ.1,000 என்று மிகக்குறைந்த தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளதைப் பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




இதுகுறித்து நம்மிடம் பேசிய வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாக்யநாதன், வானம் பார்த்த பூமியாகவும் வறட்சி நிறைந்த பகுதிகளும் உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு சம்பா சாகுபடி செய்த 1,58,000 விவசாயிகள் தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தார்கள். நெல் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 135, மிளகாய் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 1,300 என பிரீமியத் தொகையைச் செலுத்தினார்கள். கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையாலும், ஜனவரி மாதத்தில் பெய்த அதிகமான மழை, புரவி, நிவர் புயல்களாலும் நெல் மற்றும் மிளகாய் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பாக, மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் முழுவதும் அழிந்துவிட்டதை நேரில் பார்வையிட்ட மத்திய அரசு குழுவினர், மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை மற்றும் இன்ஷூரன்ஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.




அதை நம்பி மீண்டும் கடன் வாங்கி அடுத்த பருவ விவசாயத்தைத் தொடங்கினோம். கடந்த வருடத்துக்கான காப்பீட்டுத் திட்ட இழப்பீடு தொகை வந்தால் பெற்ற கடனை அடைக்கலாம் என்று விவசாயிகள் நம்பியிருந்தார்கள். ஆனால், அரசு தற்போது அறிவித்த பயிர் காப்பீட்டுத் தொகையை பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ரூபாய் நஷ்டமாகியுள்ள ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கிலும் ரூ.100 முதல் ரூ.1,000 வரை மட்டுமே வரவாகியுள்ளது. இது எந்த அடிப்படையில் வழங்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை. நெல் ஏக்கருக்கு  130 ரூபாயும், மிளகாய் ஏக்கருக்கு 1,300 ஆம் பிரீமியம் செலுத்தியுள்ள நிலையில், அதை விட மிகச் சொற்பமாக காப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளார்கள்.வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தை விட்டுவிடாமல் கடன் வாங்கி செய்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இயற்கைப் பேரிடர் ஒருபக்கம் நஷ்டத்தை உண்டாக்கி வருகிறது என்றால், காப்பீட்டுத் திட்டம் என்று ஆசை காட்டி மேலும் கஷ்டத்தை அரசு உண்டாக்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், தொகுதி அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். தமிழக முதலமைச்சரி தனிப் பிரிவுக்கும் மனுவை அனுப்பியுள்ளோம். முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை பரீசீலனை செய்வார் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.




மழையால் சேதமான பயிர்களையும் விவசாயிகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்ய மாவட்ட அதிகாரிகள், வேளாண்துறையினர், மத்திய அரசின் பார்வையாளர்கள், காப்பீட்டு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மதிப்பீடு செய்து சென்ற நிலையில், தனியாக இழப்பீடும், ஏக்கருக்கு 16,000 வரை காப்பீடும் வழங்குவார்கள் என்று நம்பியிருந்த நிலையில் தற்போது வழங்கியுள்ள சொற்பத் தொகையை எந்த அடிப்படையில் வழங்குகிறார்கள் என்பது தெரியவில்லை என்கிறார்கள் விவசாயிகள். சம்பா பயிர் இழப்பீடாகத் தமிழகத்துக்கு 2,22,579 விவசாயிகளுக்கு 507.99 கோடி ரூபாய் இழப்பீடாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 5,070 விவசாயிகளுக்கு 2.42 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.