நெல்லை பாளையங்கோட்டையில் பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டம் நெல்லை மாவட்ட பாமக செயலாளர் சியோன் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், "பாமக 2.0 என்பது அனைவருக்கும் வளர்ச்சி அனைவருக்கும் உரிமை என்பதை கொண்டது.  40 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் கலவரமாக இருந்தது. அந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க டாக்டர் ராமதாஸ் அவர்களை அழைத்து பேசி முடித்து வைக்க காவல்துறையினரை அழைப்பார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் பாமக ஆட்சிக்கு வரப்போகிறது.56 ஆண்டுகாலம் இரு கட்சிகளும் ஆட்சி செய்தது போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். மக்கள் திமுக, அதிமுக மீது கோபத்துடன் உள்ளனர். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க போகிறோம் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். டீசண்ட் டெவலப்மெண்ட் அரசியலைதான் நாங்கள் செய்து வருகிறோம். எங்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். 40 ஆண்டு காலமாக தென் மாவட்டங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நினைத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். தென் மாவட்டங்களில் தொழில்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பாமகவிற்கான நோக்கமும், பயணமும் அதிகம் உள்ளது. இலக்கை அடைவதற்கு அமைதியான முறையில் அர்ப்பணிப்புடன் முன்னேற வேண்டும். தமிழகத்தை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் பின் தங்கிய மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தமிழகம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தால் முன்னேறிய தமிழகத்தை உருவாக்கி சிங்கப்பூருடன் போட்டியிட செய்வோம். தென்மண்டல ஐஜியாக இருக்கும் அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி. பாமக ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறை தலைவராக அவரை ஆக்குவோம். ஆளும் கட்சியாக யார் இருந்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் வாயிலாக தமிழகத்திற்கான பல்வேறு நல்ல திட்டங்களை பாமக செய்ய வைத்துள்ளது.


இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்தபோது உலகத்தின் மிகப்பெரிய அரசியல் மாபியாவை தன்னந்தனியாக எதிர்த்தவன். தமிழகத்தின் அரசியல் எல்லாம் எனக்கு சர்வ சாதாரணமானது. இந்தியாவின் சுகாதாரத் துறையில் 50 ஆண்டுகளில் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் நான் அமைச்சராக இருந்தபோது செய்து கொடுத்தேன். பாமக இல்லை என்றால் இந்தியாவிற்கு 108 ஆம்புலன்ஸ் திட்டம் கிடைத்திருக்காது. தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் கிடைத்திருக்காது. 2005ல் முதன்முதலில் 108 ஆம்புலன்ஸ் சேவை கொண்டுவரப்பட்டு முதல் ஆறு மாதங்களில் அதிகமான அழைப்புகள் மகப்பேறு சிகிச்சைக்காக மட்டும் வந்தது. 56 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக அதிமுக, கட்சிகள் மக்களுக்கான இது போன்ற நல்ல திட்டங்கள் எதையாவது ஒன்றைக் கொண்டு வந்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.


இந்தியாவிற்கே பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த எங்களால் தமிழகத்திற்கு எவ்வளவு செய்ய முடியும். பாமக தென் மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பாமகவின் மீது சாதி அடையாளத்தை பூசி வெளிஉலகிற்கு காட்டி விட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை திராவிட மாடல், திராவிட மாடல் என சொல்லும் கட்சிகள் தாமிரபரணிக்கு என்ன செய்துள்ளது. தாமிரபரணி நதியை திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகள் தான் நாசப்படுத்தியது. கூவத்தையும் திமுக, அதிமுக கட்சிகள் தான் அழித்தது. ஆட்சிக்கு வரும் முன்னே திமுக ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தர்பல்டி  அடித்து ஒரு பேச்சும் பேசுகிறது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு பணி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என சொன்ன திமுகவின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.




மண்ணையும், மக்களையும் தொட்டால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். தென் மாவட்டங்களில் அதிக கலவரம் வர காரணம் தொழில் வேலை வாய்ப்பு இல்லாதது தான். 10, 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தென் மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள். ஆனால் போதிய வேலைவாய்ப்பு தொழில் இல்லாததால் டாஸ்மாக்கை நோக்கி திசை திரும்பி கலவரம் செய்யும் அளவிற்கு மாறிவிடுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வெறும் அறிவிப்பை மட்டும் அறிவித்துவிட்டு ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாமக ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக்களையும் மூட முடியும். இரண்டு கட்சிகளுக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற அக்கறை கிடையாது. பல போராட்டத்திற்கு பின்னர் 500 டாஸ்மாக் கடைகளை மூடி உள்ளனர்.


தற்போது ஒவ்வொரு ஊராட்சிக்கும் புதிதாக மூன்று கடைகளை திறப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக ஒரு பேச்சு வருகிறது. இந்தியாவில் அதிக இளம் விதவைகள், விபத்துக்கள், மனநோய், தற்கொலை ,கல்லீரல் பிரச்சனைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 20 வயது இளைஞர் மது இல்லாமல் இருக்கவே முடியாத நிலையை உருவாக்கியதுதான் திராவிட மாடல். தமிழகத்தின் கடன் கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் என மத்திய அரசின் புள்ளி விபரங்கள் சொல்கிறது. அதிக கடன் வாங்கிய தமிழக அரசு என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்பதை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தான் சொல்ல வேண்டும். எங்களிடம் தமிழகத்தின் ஆட்சியை ஐந்து ஆண்டுகள் கொடுங்கள் கடன் இல்லாத தமிழகத்தை உருவாக்கி காட்டுகிறோம். தமிழகத்தை வளமாக மாற்ற பல நல்ல திட்டங்கள் வைத்துள்ளோம். இத்தனை ஆண்டு ஆட்சி செய்த அரசுகள் வேளாண் கட்டமைப்புகளை உருவாக்கி வந்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாததால் தக்காளி உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. பிரியாணியை விட தக்காளி சாதத்தின் விலை உயர்ந்துவிட்டது. இந்த நிலைக்கு காரணம் திராவிட அரசுதான். தமிழகத்தின் 70 ஆண்டு ஆட்சி காலத்தில் பெற்ற கடலில் 50 சதவீத நேரடி கடனை திமுக தான் பெற்றுள்ளது. தெலுங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்கு ஒன்றரை லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


ஆந்திராவில் நீர்ப்பாசன திட்டத்தில் 70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஓடாத டிவியிலும் காத்து வராத ஃபேனிலும் முதலீடு செய்து மக்களை சிந்திக்க திறன் இல்லாத அடிமைகளாக மாற்றி வைத்திருக்கிறார்கள். மக்களைப் பற்றிய கவலை இல்லாமல் தான் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினை என்றால் முதன் முதலில் பாமக தான் குரல் கொடுக்கும் வளமான மண்ணை அழிக்கும் திட்டமான எட்டு வழி சாலைக்கும் முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பாமக தான். தமிழகத்தில் 10 ஆண்டுகளில்  உணவு பஞ்சம் வரப்போவதாக ஐநா சொல்கிறது. விவசாயிகளின் எதிரியாக திமுக திகழ்ந்து வருகிறது. இனியும் நெய்வேலியில் நிலம் கையகப்படுத்தினால் திமுகவுக்கான கவுண்டன் தொடங்கிவிடும். விவசாயிகளுக்கான கேடயமாக அன்புமணியும் பாமகவும் இருக்குமே தவிர நாங்கள் அவர்களை கேடயமாக மாற்ற மாட்டோம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மட்டும் இருந்திருந்தால் நெய்வேலியில் நடக்கும் பிரச்சனையை உடனடியாக நல்ல முடிவுக்கு கொண்டு வந்து அதனை முடித்து வைத்திருப்பார் என அவர் தெரிவித்தார்.