கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியிருக்கும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.


                              

 

இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டு இருக்கிறது. இந்த நீர், தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டிச் செல்கிறது.மருதூர் அணைக்கு உட்பட்டமருதூர் மேலக்கால், கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு உட்பட்ட வடகால், தென்கால் ஆகிய வாய்க்கால்களையும் திறந்துவிடவில்லை. இவ்வாறு காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் வரும்போது வாய்க்காலைத் திறந்துவிட்டால் மடைகள் உடையும் அபாயம் இருப்பதால் திறக்கப்படவில்லை.


                              

 

இந்த நிலையில், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றுப் பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் நீர் அதிகமாக திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த வெள்ள நீர், புன்னக்காயல் வரை செல்லும். எனவே பொதுமக்கள், தாமிரபரணி ஆற்றில் நீராடவோ, விளையாடவோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்படுகிறது.மேலும் ஆற்றின் கரையோரம் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.


                               

 

ஆண்டுதோறும் பருவமழையின் போதும், அதிகப்படியான வெள்ளத்தின் போதும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் பாசனக் குளங்களை முழுமையாக தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு சேமிக்கும் பட்சத்தில் இப்பகுதியில் முப்போகம் விளைச்சல் இருக்கும்  என்கின்றனர் விவசாயிகள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை நிலவரப்படி திருச்செந்தூரில் 48 மி.மீ, தூத்துக்குடியில் 23 மி.மீட்டர் மழையும் காயல்பட்டிணத்தில் அதிகப்பட்சமாக 90 மி.மீட்டர் மழையும் பெய்து உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வாழை , நெல் விவசாயப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. விளை நிலங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.