பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 20 ஆண்டுகளில் எய்ட்ஸ், கொரனோ உள்பட பல்வேறு நோய்களால் 133 கைதிகள் மரணம் அடைந்துள்ளதாகவும் சிறை அலுவலர்கள் தாக்கியதில் கைதிகள் உயிரிழந்ததாக பதிவேடுகள் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழக்கறிஞருக்கு கேட்ட கேள்விக்கு பாளையங்கோட்டை மத்திய சிறை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பலர் உடல்நலக்குறைவால் உயிரிழக்கு சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது அதேசமயம் சிறை அலுவலர்கள் தாக்குவதன் மூலம் பல கைதிகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பாளையங்கோட்டை சிறையில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடைபெறுவதால் அதன் காரணமாகவும் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் வாகைக் குளத்தை சேர்ந்த கைதி முத்து மனோ என்பவர் சாதி மோதல் காரணமாக சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

 



 

இந்த சூழ்நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாளையங்கோட்டை சிறையில் எத்தனை கைதிகள் உயிரிழந்துள்ளனர்? மேற்கண்ட ஆண்டுகளில் தற்கொலையில் ஈடுபட்ட கைதிகளின் விபரங்கள் என்ன?, கைதி ஒருவர் சோப் ஆயில் குடித்து தற்கொலை முயற்சி செய்தபோது அவர் கையில் விலங்கிட்டு கட்டிப்போட்டு துன்புறுத்திய சிறை அலுவலர் மற்றும் அவர்களின் பணி பொறுப்பு என்ன? என்பது உள்பட 5 கேள்விகளுக்கு பதில் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  வழக்கறிஞர் பிரம்மா மனு அளித்திருந்தார்.



 

தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பொது தகவல் உதவி அலுவலர் வழக்கறிஞர் பிரம்மாவுக்கு தகவல் வழங்கியுள்ளார் அதில் கடந்த 2000 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் மொத்தம் 133 கைதிகள் பல்வேறு நோய்களால்  உயிரிழந்துள்ளதாக அவர்களின் பெயர் மற்றும் உயிரிழந்த இடத்தின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக இதில் எய்ட்ஸ் மற்றும் கொரனௌ போன்ற கொடிய நோய்களாலும் கைதிகள் இறந்திருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இதில் 90 சதவீதம் பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்திருப்பதாக தகவல் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் கடந்த 03.11.2020 அன்று விசாரணைக் கைதியான கருத்தபாண்டி என்பவர் சோப்பு ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரைச் சிறைப் பணியாளர்கள் துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர் .

 

மேலும் 2000 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சிறை அலுவலர்களால் தாக்கப்பட்டு சிறைவாசிகள் இறந்ததாக பதிவேடுகளில் குறிப்புகள் எதுவுமில்லை என்றும் தற்கொலைக்கு முயற்சி செய்த சிறை வாசிகள் தொடர்பாக எதுவும் பதிவேடுகள் தனியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் மேற்கண்ட ஆண்டுகளில் சிறைவாசிகள் தற்கொலைக்கு முயற்சி செய்வதை தடுக்க தனியாக அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் சிறையில் சிறைவாசிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு மன நல அலுவலர் மற்றும் மனநல ஆலோசகராக நியமிக்கப்பட்டு கைதிகளுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் இந்த தகவலில் பல உண்மைச் சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் பல கைதிகள் சிறை அலுவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் வழக்கறிஞர் பிரம்மா குற்றம்சாட்டியுள்ளார்