கொட்டி தீர்த்த மழையால் தத்தளித்த நெல்லை.. முடுக்கிவிடப்பட்ட நடவடிக்கை..

3 மணிநேரத்திற்கும் மேல் பெய்த கனமழையால் தத்தளித்த நெல்லை - உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள்

Continues below advertisement

தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் நெல்லையில் கடந்த் சில நாட்களாக பருவமழை அதிக அளவில் பெய்து வந்தது, நேற்று மாலையில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து நீடித்த கனமழை பெய்தது, இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மேலும் மாநகரில் உள்ள மனகவலம்பிள்ளை மருத்துவமனை, பாளை திரிபுராந்தீஸ்வரர் (சிவன்) கோவில், பகுதிகளிலும்,  செந்தில் நகர், அன்பு நகர், சேவியர் காலணி, பரணி நகர், ராஜேந்திரா நகர், எம்கேபி நகர், சீவலப்பேரி சாலை, கிருஷ்ணாபுரம்  உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்பிற்குள்ளும் மழைநீர் புகுந்தது.

Continues below advertisement


தற்காலிக புதிய பேருந்து நிலையத்தில் இடுப்பளவிற்கு  தண்ணீர் தேங்கியதால் பயணிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்தனர், இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அதே போல நெல்லையப்பர் கோவில் முன் பகுதியிலும், டவுண் கரிய மாணிக்க பெருமாள் கோவிலிலும் மழை நீர் தேங்கியது, பழைய ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் தொடர் மழையினால் மண்சரிவு ஏற்பட்டது பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, பின்னர் அதனை ஜேசிபி இயந்திரம் மூலம் சரி செய்தனர்.



மழை பாதிப்பு குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், அதிகாரிகள், மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  அப்துல் வகாப் ஆகியோர் மனக்காவலம்பிள்ளை நகர் செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் நேரில் பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்றவும் , தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மழை நீர் புகுந்து பாதிப்படைந்த பாளையங்கோட்டை சிவன்கோவிலையும் பார்வையிட்டு கோவில் உள்புறம் தேங்கி நிற்கும் மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்படதைத் தொடர்ந்து மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பின்னர் அன்பு நகர் பகுதியில் சாலை இரண்டாக பிரிக்கப்பட்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் அன்பு நகர் குடியிருப்புக்கள் தண்ணீர் புகுந்தது, அங்கும் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். குடியிருப்பு பகுதியில் இருந்து பலர் காலி செய்துவிட்ட நிலையில் அங்கிருக்கும் ஒரு சில குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த சென்டர் மீடியனை இடித்து தண்ணீர் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 



இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில்  நெல்லை பகுதியில் சுமார் 3 மணிநேரம் பெய்த கன மழையால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மனக்காவலம்பிள்ளை நகர், செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வீடுகளுக்குள் சென்றுள்ளது, அந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாளையங்கோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க சிறப்பு முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அணைகளும் நிரம்பியுள்ளதால் தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிக்கு செல்ல குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது, ஆற்றுப் பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என  கேட்டுக் கொண்டார். 

அதேபோல நெல்லையில் நேற்று பெய்த தொடர்மழை காரணமாக பல இடங்களில் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது, அதனையும் மின்வாரிய பணியாளர்கள் சரி செய்தனர், இந்த நிலையில் தொடர் மழை காரணமாகவும் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை மையம்  அறிவுறுத்தியதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்

Continues below advertisement