விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரிக்காளை. இவருடைய மகன் மணிகண்டன்(27). இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் நேற்று முன்தினம் காலையில் மணிகண்டன் அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ்(38) என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் முத்துராஜ் என்பவர் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. 


குத்திக்கொலை:


இந்த நிலையில், மணிகண்டனும் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவரும் காளியம்மன் கோவில் அருகே நேற்று இரவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் முத்துராஜ் என்பவர் அப்பகுதிக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. பின்னர் மணிகண்டன் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கே வந்த முத்துராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தி உள்ளார்.


பின்பு, அங்கிருந்து முத்துராஜ் தப்பியோடிய நிலையில் மணிகண்டன் கழுத்து பகுதியில் காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பின்னர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டனின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரது உடலை கண்டு கதறி அழுதனர்.  


புதுமாப்பிள்ளை:


மேலும் இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் சகோதரர் மாரநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய முத்துராஜை காவல்துறையில் கைது செய்தனர்.  திருமணம் முடிந்து 3 மாதமே ஆன புதுமாப்பிள்ளை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண