நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றுபவர் பார்வதி மல்லிகா. இவரிடம்  பாளையங்கோட்டையைச் சார்ந்த கணவனை இழந்த மகாலட்சுமி என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார். மேலும் அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அளித்துள்ளார். மனுவை பரிசீலித்த பார்வதி மல்லிகா,  நிதி உதவி பெற தனக்கு  2500 ரூபாய்  தர வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் லஞ்சமாக மகாலட்சுமி கேட்டதை கொடுக்க மனமில்லாத மகாலட்சுமி இது குறித்து மாவட்ட  லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் நெல்லை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி எஸ்கால் மற்றும் ஆய்வாளர் ஞானராபின்சிங்  உதவி ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் சீதாராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மகாலட்சுமியிடம் ரசாயன கலவை தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர்.


பின் இதனை மறைந்திருந்து கவனித்தனர். தொடர்ந்து இரசாயன பணத்தை பெற்றுக் கொண்ட மகாலட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்திற்கு சென்று பார்வதி மல்லிகாவிடம் பணத்தை கொடுத்தார். இதனை மறைந்திருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு போலிசார் பார்வதி மல்லிகாவை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த லஞ்ச  ஒழிப்பு போலீசார் அவரிடம் இருந்த லஞ்ச பணத்தையும்  பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிதி உதவிக்காக 2500 ரூபாய் லஞ்சம் பெற்று கையும் களவுமாக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மாட்டிக்கொண்டது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.