நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 44 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு 12-01-2024 அன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கடந்த 27ஆம் தேதி அறிவித்திருந்தார். அதேசமயம் வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டால் ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் கவுன்சிலர்களை திமுக தலைமை சமாதானப்படுத்தியது. குறிப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லைக்கு வந்து கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என தெரிவித்ததோடு இந்த பொறுப்பை பார்த்துக் கொள்ளுமாறு முன்னாள் மாவட்ட செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப்பிடம் தெரிவித்து சென்றதாக கூறப்பட்டது. அமைச்சரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மீண்டும் திமுக நிர்வாகிகள் தலைமையில் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


இருப்பினும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மன நிலையில் இருப்பதாகவே தெரிந்த நிலையில் அனைத்து கவுன்சிலர்களையும் 3 குழுக்களாக கன்னியாகுமரி, விருதுநகர் என இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நெல்லையிலிருந்து கவுன்சிலர்கள் அனைவரும் கிளம்பி சென்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மேயர் சரவணன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் விவாதம் மாநகராட்சி ஆணையர் அறிவித்தப்படி தொடங்கியது. அப்போது மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு சென்றார். அதே சமயம் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு கவுன்சிலர்கள் கூட வரவில்லை. நெல்லை மாநகராட்சியை பொருத்தவரை மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் இதில் 44 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் மீதமுள்ள 11 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். இருப்பினும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரில் ஒருவர் கூட கூட்டத்திற்கு வரவில்லை..  இதனால் தீர்மானம் தோல்வியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. 




அதன்படி ஒரு மணி நேரத்திற்கு பின் ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் செய்தியாளர்களிடம் கூறிய போது, கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, எனவே கோரம் இல்லாததால் கைவிடப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தீர்மானம் தோல்வியில் முடிந்ததால் சட்ட விதிகளின்படி அடுத்து ஓராண்டுக்கு கவுன்சிலர்கள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது எனவும் அறிவித்து சென்றார். முன்னதாக பாதுகாப்பிற்காக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சுழல் நிலவியது.