விநாயகர் சதுர்த்தி வரும்  18ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் வழக்கம்போல் இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகள் வழிபாடு மற்றும் ஊர்வலத்திற்கு தயாராகி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை கிருபா நகர் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் குடோனில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி சிலை மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். அதன் தொடர்ச்சியாக சிலைகளில் அதிகளவு ரசாயனம் பயன்படுத்துவதால் விநாயகர் சிலை தயாரிக்கப்படும் குடோனை சீல் வைக்கும் நடவடிக்கையில் சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.. அதற்கு இந்து முன்னணி உட்பட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக குடோனை இழுத்து மூடிய அதிகாரிகள் அடுத்தக்கட்ட ஆய்வு முடிவுகள் வரும் வரை சிலைகளை விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்து விட்டு சென்றனர்..




இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தயார் செய்து வைத்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய முடியாமல் சிலை தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.. இது போன்ற சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் மற்றும் நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் ஆகியோர் இன்று கிருபா நகரில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பு குடோனை நேரில் பார்வையிட்டனர்.. அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தனர்.


இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கெடுபிடு விதிப்பது குறித்தும், தொகுதி மக்கள் சார்ந்த பிரச்னைக்கும் மனு அளித்தோம். நீதிமன்ற தீர்ப்பு என்பதால் ரசாயானம் கலந்த சிலைகளை வைக்கக்கூடாது, கடலை மாவால் தயாரிக்கப்பட்ட சிலையை பயன்படுத்தலாம் என ஆட்சியர் கூறினார். இருப்பினும் எங்கள் கோரிக்கையை ஆவணம் செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.  இந்தாண்டு தயார் செய்து வைத்த சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.. பாஜக எல்லா மதத்தை சேர்ந்த மக்களுக்கும் பொதுவான கட்சி. ஆனால்  இந்து மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் உடனடியாக களத்தில் இறங்குவோம்.. சிலைகள் வைக்க அனுமதிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் என அரசை எதிர்த்து எங்கள் கண்டன குரல் நிச்சயம் ஒலிக்கும் என்றார்.


தொடர்ந்து சனாதனத்தை ஒழிப்போம் என்ற கருத்து குறித்து கேட்டபோது, அவர்கள் எதை ஒழிப்பார்களோ தெரியவில்லை. மக்கள் தேர்தலில் எதையாவது ஒழிக்கனும்.. சனாதனத்தில் 4% இந்துக்கள் தான் பயன் பெறுவதாக சபாநாயகர் எந்த அடிப்படை சொல்கிறார் என தெரியவில்லை, சனாதன தர்மத்தை யார் எதிர்த்தாலும் நிச்சயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பளிப்பார்கள் என்றார். தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் ஆனால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக அதிகரிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு பேசியது குறித்து கேள்வி எழுப்பிய போது நயினார் நாகேந்திரன் சிரித்துக்கொண்டே பதில் கூற மறுத்து விட்டார்... ஆனால்  அருகில் இருந்த பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர், அப்படி என்றால் ஒருபோதும் 150 நாள் ஆகாது என்று நக்கலாக பதில்  கூறினார்.