நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், மிளா காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. குறிப்பாக பாபநாசம், கடையம், சிவந்திபுரம், மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மலையடிவாரத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகளும் அவ்வப்போது உணவு தேடி ஊருக்கு நுழைவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் தொடர்ச்சியாக கூண்டு வைத்து பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. இருப்பினும் இன்னும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர்ச்சியாக வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கரடிகளும் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. 


குறிப்பாக இன்று விடுமுறை நாள் என்பதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் நேரத்தில் இன்று பிற்பகலில் பட்டப்பகலில் மணிமுத்தாறின் பிரதான சாலையில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அதனை கண்ட மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதனை கண்டு ஓடிய கரடி மணிமுத்தாறில் உள்ள 9 ஆம் காவல் பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியது. இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். 




இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். மேலும் மரத்தில் உள்ள கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்களும் அங்குள்ள காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மரத்தில் இருக்கும் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக வனத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதோடு மயக்கமடைந்து கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க வலையை விரித்து கரடியை பத்திரமாக மீட்கும் வகையில் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் சூழ்ந்து இருப்பதால் கீழே இறங்காமல் கரடியும் அச்சத்திலேயே 10 மணி   நேரத்திற்கும் மேலாக மரத்தில் தஞ்சமடைந்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் இளையராஜா நேரில் பார்வையிட்டு கரடியை மீட்டு வனத்திற்குள் அனுப்பும் பணியை முடுக்கிவிட்டுள்ளார்.  தொடர்ந்து அதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.