நெல்லை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி பள்ளிகளில் உள்ள குறைகள் மற்றும் சிறத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள 18 குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட 1535 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாரிசங்கர் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி கேட்டு உள்ளார். அதற்கு முறையாக பதில் அளிக்காமல் இருந்த சூழலில் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இரண்டாம் மேல்முறையீட்டில் விசாரணை காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் உரிய தகவல்களை வழங்க வேண்டும். இல்லையென்றால் 25,000 அபராதமாக விதிக்கப்படும் என மேல்முறையீட்டு ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த சூழலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.


அதில் 100 பள்ளி கட்டிடங்கள் மோசமாக இருப்பதாகவும், மாற்று கட்டிடங்கள் தயார் செய்யாமல் இருப்பதாகவும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மறு சீரமைப்பு செய்வதற்கு தமிழக அரசின் சார்பில் எந்த  நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 100 பள்ளி கட்டிடங்கள் மோசமாக இருக்கும் நிலையில் அதனை இடிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் School infrastrucure Survey  எனும் இணைய பக்கத்தில் இருந்து தகவல்களை பெற்றுள்ளார். அதில் மோசமான நிலையில் 159 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், 144 கட்டிடங்கள் தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாகவும், 81 கட்டிடங்கள் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 193 கட்டிடங்களில் சமையல் அறை கட்டிடங்கள் மோசமாக இருப்பதாகவும், 263 பள்ளிகளுக்கு பேருந்து வசதிகள் தேவைப்படுவதாகவும், 665 பள்ளிகள் விளையாட்டு மைதானம் இல்லாமல் இருப்பதாகவும், 23 கட்டிடங்கள் சுற்றுச்சுவர் மோசமான நிலையில் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் ஒரு வருட காலத்திற்கு பின் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் தற்போதைய நிலை குறித்து தகவல் ஏதுவும் தெரிவிக்காமல் வெள்ளத்தில் ஆவணங்கள் அழிந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். கையில் ஆவணங்களை வைத்துக் கொண்டே மேல்முறையீட்டிற்கு பின் தகவல்களை தந்திருப்பது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என மாரிசங்கர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 1535 பள்ளிகள் தற்போது என்ன நிலைமையில் உள்ளது என்பதை மாவட்ட ஆட்சியர் மீண்டும் கள ஆய்வு செய்து உறுதி தன்மையை உறுதி செய்தால் மட்டுமே மாணவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பள்ளியை தொடரும் சூழல் இருக்கும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஒரு குழு அமைத்து தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை விட கோரி மாவட்ட ஆட்சியருக்கு மாரிசங்கர் புதிய கடிதம் ஒன்றை வழங்கி உள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் பள்ளியில் படிப்பது தற்போது அதிகாரிகள் கொடுத்துள்ள தகவலில் அம்பலம் ஆகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு தற்போதைய நிலை குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.