திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்கள்.


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையினையும், நிவாரணப் பொருட்களையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று (25.12.2023) வழங்கினார்கள்.


திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய நாட்களில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அதிக அளவுகளுக்கு மேல் தண்ணீர் வந்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழையானது திருநெல்வேலி, தூத்துக்குடி அதிகளவு பாதிப்புகள் ஏற்படுத்தியது.


 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களையும், உயர்அதிகாரிகளையும் அனுப்பி வைத்து மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில், மீட்பு பணிகள் துரிதப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் 16 நபர்கள் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதமும், 67 மாடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.37,500/- வீதமும், 1064 வீடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.10,000/- வீதமும், 504 ஆடுகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.4000/- வீதமும், 135 கன்றுகள் இழந்தவர்களுக்கு தலா 5.20,000/- क्रप्रй, 28,392 கோழிகள் இழந்தவர்களுக்கு தலா ரூ.100/- வீதம் 2 கோடியே 87 இலட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படவுள்ளது.


இன்றையதினம், முதல் கட்டமாக நீரீல் மூழ்கி மற்றும் மின்சாரம் தாக்கி இறந்த 11 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதமும், வீடு இழந்த 5 நபர்களுக்கு தலா ரூ.10, 000/- வீதமும், மாடு, ஆடு, கோழி இழந்த 5 உரிமையாளர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு ரூ.58 இலட்சத்து 14 ஆயிரம் நிவாரணத்தொகையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்கள்.


தமிழ்நாட்டு பொதுமக்களை பாதுகாக்கும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிவாரணப் பணிகள் அமைச்சர் பெருமக்கள், உயர் அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்றி வருகிறார்கள்.


இந்நிகழ்வில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகனியா அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு.பி.எம்.சரவணன் அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., அவர்கள், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் அவர்கள், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் அவர்கள், துணை மேயர் கே.ஆர்.ராஜூ அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அவர்கள், பேரிடர் வட்டாட்சியர் செல்வம் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.