குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மண்டல அளவிலான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ அன்பரசன் பங்கேற்று 123 பயனாளிகளுக்கு  47 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தொழில் மைய மேலாளர்களுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தவும், தொழில் கடன் உள்ளிட்டவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ அன்பரசன், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் மூன்று ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் 2815 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் தொழில் முனைவராக உருவாக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூன்று லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அதிமுக ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரத்து 230 நபர்கள் மட்டுமே தொழில் முனைவோர்கள் மட்டுமே  உருவாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் முன்னோடி திட்டமாக தமிழக அரசால் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்காக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் 159.40 கோடி மானியத்துடன் 302.86 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1369 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். பின்தங்கிய தென் மாவட்டங்களில் 262.13 கோடி மானியத்துடன் 769.27 கோடி வங்கி கடன் உதவியுடன் 9594 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.


திமுக ஆட்சி வந்தவுடன் இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் மூன்றாவது மாநிலமாக நமது மாநிலம் திகழ்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை போல் வரும் பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சிறு, குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 170 ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு 69 கோடியே 15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 90 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 சிட்கோ தொழில்பேட்டைகளில் 6 தொழில்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 8 சிக்கோ தொழிற்பேட்டைகள் புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிகாரிகளை ஊக்குவித்து இளைஞர்களை புது தொழில் முனைவராக உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.