நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு  பின்னர் அவர் செய்தியாளர்கள் கூறுகையில்,  ”நாடு முழுவதும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தை பொறுத்த அளவில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.  மக்களால் பெரிதும் போற்றப்படும் கூட்டணியாக மாறி உள்ளது. இந்தக் கூட்டணி இந்திய அளவில் 400 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்படும்.  சீட்டு ஒதுக்குவதில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அன்றைய தினமே அது பேசி சரி செய்யப்பட்டுள்ளது.  அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் கூட்டணியாக உள்ளது. 


ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் இரு வேறு நபர்கள் அல்ல இருவரும் ஒருவரே. தமிழ்நாட்டில் வெற்றி பெற திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி பிரச்சாரமும் தமிழக அரசு செய்த சாதனைகளுமே போதுமானது.  இருந்த போதிலும் தமிழக முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே பிரச்சார மேடையில் பங்கேற்பார்கள். மோடியை ஒப்பிடுகையில் ராகுல் காந்திக்கு தமிழகத்தில் 79% மக்கள் ஆதரவு உள்ளது. மோடிக்கு 26% மக்கள் ஆதரவு. 10 வருடம் பிரதமராக இருந்தவருக்கு இது தான் தமிழ்நாட்டின் நிலை. தென்னிந்தியாவில் ஒரு தொகுதி கூட பாஜக வெற்றி பெறாது.  வட இந்தியாவில் கடந்த முறை பெற்ற வெற்றியில் நான்கில் ஒரு பங்கு வெற்றியை கூட பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.  இந்தியா கூட்டணி தலைவர்கள் வலுவான தலைவர்கள். மோடிக்கு பயத்தின் காரணமாக எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களை அமைச்சர்களை கைது செய்து வருகிறார்கள்.


ஓராயிரம் மோடி வந்தாலும் இந்தியாவில் மீண்டும் பிஜேபி ஆட்சியை பிடிக்க முடியாது. இந்தியா கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும். இந்த கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காக்கும் கூட்டணி. இந்த கூட்டணி மக்களுக்கான கூட்டணி.  மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறை, நாட்டில் எதெல்லாம் நடக்க கூடாதோ அதெல்லாம் நடைபெறுகிறது. இந்தியாவின் இந்தியா மக்களின் காக்க ஒரு சபதம் எடுத்து செயல்படுகிறோம்.


கருத்துக் கணிப்புகள் எல்லாம் அனைத்தையும் தவிடு பொடி ஆக்குவோம். நெல்லை தொகுதியில் உறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் நூற்றுக்கு இருநூறு சதவீதம் வெற்றியை பெறுவார். கடந்த முறை பெற்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் பெறுவோம். மு க ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார்கள்.


தமிழ்நாட்டில் பிஜேபி வருவதற்கு வாய்ப்பே கிடையாது. பகல் கனவு காண வேண்டாம்.  மோடிக்கு எதிராக பேசும் ஒரே முதல்வர் நம்முடைய முதல்வர். முக ஸ்டாலின் மட்டுமே தைரியமாகவும், ஆணித்தரமாகவும் மக்கள் மன்றத்தில் பேசும் ஒரே முதல்வர். தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது மோடி வரவில்லை. தமிழகத்தில் திட்டங்களை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஒன்று செய்யவில்லை நான்கு பணக்காரர்களை மட்டும் வளர்த்து விட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.