தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவில் கடந்த 2 மாதங்களாக பிலிம் இல்லை என்பதால் பேப்பரில் எக்ஸ்ரே முடிவுகளை கொடுப்பதால் மருத்துவர்கள் குழப்பமடைவது மட்டுமின்றி தரமான சிகிச்சை பெறமுடியவில்லை என்றும், அதிக விலை கொடுத்து வெளியில் எக்ஸ்ரே எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நிதிபற்றாக்குறை காரணமாக பிலிம் வாங்க முடியவில்லை என்றும், விரைவில் சரி செய்யப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

                             


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர். தீப்பெட்டி, பட்டாசு ஆலை, நூற்பாலை தொழிலாளர்கள், விவசாயிகள் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாகவும், 500க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளில் காயமடைந்தவர்களும் அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலை உள்ளது.



                                  


இந்நிலையில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவில் பிலிம் இல்லாத காரணத்தினால் எக்ஸ்ரே பேப்பர் மற்றும் வாட்ஸ் அப்பில் அனுப்பும் நிலை உள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியமால் மருத்துவர்கள் பரிதவித்து வருகின்றனர். பிலிமில் எடுக்கப்பட்டால் பாதிப்புகள் குறித்து எளிதில் அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவர்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால் பேப்பரில் எடுத்து தருவதால் பாதிப்புகள் குறித்து சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது. மீண்டும் வெளியில் சென்று தனியார் எக்ஸ்ரேக்கு சென்று பணம் செலவழித்து பிலிமில் எக்ஸ்ரே எடுத்து மீண்டும் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக அரசு மருத்துவமனையில் பிலிம் மூலமாக எடுக்கப்படும் எக்ஸ்ரேவுக்கு ரூ.50 வசூலிக்கப்படும். ஆனால் தற்பொழுது வெளியே எடுப்பதால் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை பொது மக்கள் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக விபத்துக்களில் சிக்கி வருபவர்கள் பேப்பரில் எக்ஸ்ரே முடிவினை கொடுப்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.



                                  


அது மட்டுமல்லாது பேப்பரில் கொடுக்கப்படும் முடிவினை பாதுகாப்பாக வைப்பதிலும் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. வாடஸ் அப்பில் கொடுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தாலும், எத்தனை பேரிடம் ஆன்டராய்டு மொபைல் போன் இருக்கிறது என்று தெரியாது, மேலும் ஒவ்வொரு முறையும் செல்போனை துக்கி கொண்டு மருத்துவரிடம் காண்பிக்க முடியாது. எனவே பிலிம் என்றால் பாதுகாப்பாக வைப்பது மட்டுமின்றி, எப்போது வேண்டும் என்றாலும் எளிதல் எடுத்து செல்ல முடியும் நிலை உள்ளது.முடிவுகள் ஜெரக்காஸ் பேப்பரில் கொடுக்கப்படுவதால் மருத்துவர்களுக்கு குழப்பம் ஏற்படுவது மட்டுமின்றி, தரமான சிகிச்சை கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடமைக்காக பேப்பரில் எக்ஸ்ரே எடுத்து கொடுக்கமால் மீண்டும் பிலிமில் எடுத்து தர வேண்டும்,



                             


அரசு மருத்துவமனையில் பேப்பரில் எடுத்து தருவதால், சரியாக கணிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுவதால் வேறு வழியில்லமால் அதிக விலை கொடுத்து வெளியே பிலிமில் எக்ஸ்ரே எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால் போதிய நிதி இல்லை என்ற பதில் மட்டும் வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையீட்டு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மீண்டும் பிலிமில் முடிவுகளை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

                               


இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது நிதி பற்றாக்குறை காரணமாக பிலிம் வாங்க முடியவில்லை என்றும், தற்பொழுது பிலிம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பிலிம் மூலமாக முடிவுகள் வழங்கப்படும் என்றும், தற்பொழுது வாட்ஸ் அப் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.