சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி மற்றும் பாஜக மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அளித்த பேட்டியில், ”சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253வது நினைவு தினத்தில் அவரை போற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் ஒண்டிவீரனுக்கு தபால் தலை வெளியிட்டு அவரை மத்திய அரசு பெருமைப்படுத்தியது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த ஆண்டு முழுவதும் சுதந்திரத்திற்காக பாடுபட்டு போற்றப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை மத்திய அரசு கௌரவித்தது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட வெள்ளையர்களை எதிர்த்து போராட்டம் நடத்திய பல்வேறு தலைவர்களை தந்த மண் திருநெல்வேலி மண்” என்றார்.


திமுகவும், பாஜகவும் இணக்கம் காட்டுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு நிகழ்ச்சிக்கு சென்றதை வைத்து அரசியலில் தீர்மானிக்கக்கூடாது. மாநில அரசின் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொண்டார், அது அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாகவே பார்க்கிறோம். அரசியலாக பார்க்க கூடாது.


பிரதமர் மோடி 3வது முறையாக மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார். அது தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தின் மேம்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆளுநர் ஆண்டுதோறும் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம் தான். திமுகவினர் இந்த ஆண்டு கலந்துள்ளனர் என்றார்.


தொடர்ந்து செய்தியாளார்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், கந்தசஷ்டி கவசத்தை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்போது வேல் யாத்திரையை நடத்தியிருந்தோம். அதற்கு முருக பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பாஜகவுக்கு ஆதரவாக இந்துக்களின் வாக்குவங்கி மாறிவிடுமோ என்ற பயத்தில் திமுக இப்போது முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது. மெட்ரோ ரயில் தொடர்பான பயன்பாட்டு அறிக்கை தணிக்கை அறிக்கை போன்றவை தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை. அந்த அறிக்கைகளை அளித்தால் உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும்.


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் விவகாரத்தில் மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடியாததாலேயே இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தால் 6 மணி நேரத்திற்குள்ளாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையான  கூட்டணியாக 3 வது முறையாக பிரதமர் மோடி மக்களின் பேராதரவோடு சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டு உள்ளார் என்றார்.