உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டுதலில் தங்க பதக்கம் வென்ற கன்னியாகுமரி மாவட்ட பெண் காவலர் கிருஷ்ண ரேகாவிற்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காவல்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் கிருஷ்ண ரேகா. இவர் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். இவருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்கனவே தெலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்த கிருஷ்ண ரேகாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்தும், வாழ்த்து மடல் கொடுத்தும் வாழ்த்தினார். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 



 

கிருஷ்ண ரேகா ஏற்கனவே 2019-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் தீயணைப்பு வீரர்கள் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார். மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.