தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவுருவ பவனி- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய பனிமயமாதா பேராலயத்தில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தேர் பவனி.

Continues below advertisement

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 440-வது ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அதுபோல மாலையில் செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

Continues below advertisement


6-ம் திருவிழாவான கடந்த 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நற்கருணை பவனியும், 10-ம் நாளான நேற்று முன்தினம் மாலை பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும் ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் பேராலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்றது.

தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-வது திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர். மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான சிறப்பு திருப்பலியும், முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.


தூத்துக்குடி மண்ணில் பிறந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து நிறைவேற்றிய சிறப்பு நன்றித் திருப்பலி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்னையின் திருவுருவ சப்பரப் பவனி தொடங்கியது. பேராலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய அன்னையை பக்தர்கள் நகர வீதிகளில் பவனியாக எடுத்து வந்தனர். செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, எம்பரர் தெரு, பெரைரா தெரு, பிரெஞ்ச் சாப்பல் தெரு, ஜி.சி.சாலை, வி.இ.சாலை, தெற்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்த பவனி மீண்டும் பேராலய வளாகத்தில் நிறைவு பெற்றது.


இதனை தொடர்ந்து பேராலயத்தில் குடும்பங்களை அன்னைக்கு ஒப்புக் கொடுக்கும் நிகழ்வும், நற்கருணை ஆசீர் நடைபெற்றது. அன்னையின் திருவுருவ சப்பரப் பவனியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னையின் திருவுருவ பவனியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.  


தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நிறைவு நாளில் கத்தோலிக்க மறை மாவட்டஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பணி நடைபெற்றது. இந்த திருப்பலியின் போது முக்கிய அறிவிப்பு ஒன்றை ஆயர் ஸ்டீபன் வெளியிட்டார்.  தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய பனிமயமாதா பேராலயத்தில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தேர் பவனி நடைபெறும் என அறிவித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடைபெற்றது அந்த வரிசையில் அடுத்த ஆண்டு தூத்துக்குடியில் நகரில் பனிமய மாதா தங்கத் தேர் பவனி நடைபெற உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola