இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் சரஸ்வதி பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கண்ணை கவரும் வண்ணமிகு மின்விளக்கு அலங்காரங்களால் ஆயுத பூஜை விழா களைகட்டி உள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் பொதுமக்களின் ஆதரவோடு முக்கிய சந்திப்புகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் பிரபலங்கள் பங்கேற்கும் மெல்லிசை விருந்துகள் என இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகள் கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விழாவையொட்டி நாகர்கோயில் மாநகரத்தின் முக்கிய சந்திப்புகளில் உள்ள மரங்களிலும், சாலையோர கம்பங்களிலும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்த வண்ணம் உள்ளன. இதனை பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு களித்தனர். நாகர்கோவில் மாநகரமெங்கும் பொது மக்களின் கண்ணை கவரும் வண்ணமிகு மின் விளக்கு அலங்காரங்களால் ஆயுத பூஜை விழா களைகட்டி உள்ளது, கோவில்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.



 

தக்கலை மார்த்தாண்டம் குழித்துறை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை விழா கொண்டாட்டத்தின்போது ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது பூசணிக்காய் சாலையில் உடைக்க க்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜையை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆயுத பூஜையொட்டி பொருட்கள் வாங்குவதற்கு இன்று கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் அவல் பொரி கொண்டக்கடலை வாங்குவதற்கு பொது மக்கள் குவிந்திருந்தனர். இதனால் கடைவீதிகள் களை கட்டியிருந்தது. தக்கலை குளச்சல் அஞ்சு கிராமம் இரணியல் மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் நாகர்கோவில் நகரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் காய்கறிகளின் விலை இன்று சற்று உயர்ந்து காணப்பட்டது. வாழைத்தார்கள் விலை கணிசமான அளவு இன்று உயர்ந்திருந்தது.செவ்வாழை,கதலி போன்ற வாழைப்பழங்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

 

ஆயுத பூஜையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 4 சப் டிவிஷன்களிலும் பாது காப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டு உள்ளார். சுற்றுலா தலங்க ளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.