தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அதாவது டிசம்பர் 18ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையை அந்ததந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகங்கள் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. 


கனமழை காரணமாக திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் எப்போது மீண்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை பல்கலைக் கழகம் மீண்டும் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


அதிகனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.



  • நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

  • நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

  • பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும்.

  • ரொட்டி, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

  • மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும். 


பொது மக்களுக்கான அறிவுரை



  •  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் முகாம்களுக்கு செல்ல வேண்டும் பேரில் முன்கூட்டியே நிவாரண

  • முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

  • நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல் ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

  •  அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்

  •  அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

  • மாநில அவசரகால செயல்பாட்டு மையம் -1070

  • வாட்ஸ் அப் எண். - 94458 69848

  • மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் - 1077