நெல்லை மாவட்டம் பணகுடியை அருகே சூசையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பே இவரை பிரிந்து சென்று உள்ளார். இந்த நிலையில் மாரியப்பன் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த செங்கல் சூளையில் ஆண்கள் பெண்கள் என பலர் தங்கியும் வேலை செய்து வருகின்றனர். அந்த செங்கல் சூளையில் அமுதா என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்து உள்ளார். அமுதா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது, இந்த சூழலில் தான் மாரியப்பனுக்கும் அமுதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்து உள்ளனர்.  இந்த நிலையில் அமுதா செங்கல் சூளையில் வேலை பார்க்கும் வேறு ஒரு ஆணுடன் பேசி வந்ததாகவும், அவர்களின் உறவை மாரியப்பன் கண்டித்ததாகவும், அவருடன் இருந்த கள்ளத் தொடர்பை கை விடுமாறும்  கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகின்றது, இதனால் மாரியப்பனுக்கு  அமுதாவின் மீது இருந்த கோபத்தால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என திட்டம் தீட்டி உள்ளார். 




இன்று காலை வழக்கம் போல் இருவரும் செங்கல் சூளைக்கு பணிக்கு சென்று உள்ளனர். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த அமுதாவை அண்ணத்திக்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது அங்கு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி உள்ளார். நெஞ்சு, கழுத்து, கை, இடுப்பு, முதுகு என பல இடங்களில் ஆத்திரம் தீர குத்தி உள்ளார், இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த அமுதா அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். பின்னர் மாரியப்பன் நேராக பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவி அமுதாவை குத்தியதாக நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்து உள்ளார்.




இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலிசார் அவரை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர், அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த அமுதாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அவரை பரிசோதித்து முதலுதவி அளித்த மருத்துவர்கள் அமுதாவை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் அமுதா நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




பணகுடி போலிசார் மாரியப்பன் மீது கொலை வழக்கு பதிவு செய்து செய்தனர், தொடர்ந்து மாரியப்பனிடம் கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், கள்ளத் தொடர்பு விவகாரத்தில் தனது மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு போலிசில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.