கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தொடர்ந்த வழக்கை இறுதி விசாரணைக்காக டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோவொன்று வெளியிட்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த வீடியோவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 04.04.2020 அன்று 292 A, 295 A, 505 ( 2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தன் மீதான விரோதத்தில் பதியப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யவும் கோரி மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 



 

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மாரிதாஸ் தரப்பில்," இந்த வழக்கில் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதி, வழக்கு குறித்து மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக டிசம்பர் 23ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.




 

விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை மர்ம மரணம் - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு 

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிழக்கே விளை  பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சுதா என்பவர் உயர்நீதிமன்றம்  மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "எனது சகோதரர் ஜெகதீஸ் என்பவருக்கும் பாண்டிவிளை  பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த ஜூன் 21 ஆம் தேதி அன்று திருமணம் நடந்தது. சரண்யாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்தே, சரண்யாவை திருமணம் செய்ய ஜெகதீஸ்  முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு ஜெகதீஷ், சரண்யா தம்பதியினர் சரண்யாவின் உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு சென்றிருந்தனர். 16-7-2021 அன்று சரண்யாவின் சித்தப்பா வீட்டில் உணவு அருந்தி விட்டு வந்தனர்.

 

அதன் பிறகு ஜெகதீஸ்  சுயநினைவின்றி இருப்பதாக, ஜெகதீசன் உறவினர்களுக்கு சரண்யா போன் செய்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. அதன் பிறகு  அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்றும்  சரண்யா தெரிவித்து உள்ளார். இந்த நிலையில்  ஜெகதீஸ் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு சரண்யா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஜெகதீஸ் உடல், தக்கலை அரசு மருத்துமனை எடுத்து செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் அதிகம் உள்ளது என்று தெரியவந்துள்ளது.  ஜெகதீஸ் மரணத்தில் மர்மம் உள்ளது . எனவே இவரது மரணத்தில் மர்மம் உள்ளது. எனவே ஜெகதீஸ் மர்ம மரணத்திற்கான  காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி  ஜீ.ஆர். சுவாமிநாதன் ஜெகதீஷ்  மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.